December 31, 2009

வண்ணத்து பூச்சியாய் மாறலாம்


ஒரு முறைதான்
என் மீது
அமர்ந்து விட்டு போனாய் ...
என் நிறம்
மாறிப் போனது ..
இப்போதெல்லாம்
கவலைகள்
சூழும்போது
எனக்கு
வண்ண வண்ண
இறக்கைகள்
முளைத்து விடுகின்றன
எத்தனை தூரம்
வேண்டுமானாலும்
சிறகடித்து
பறக்க முடிகிறது..
விண்ணில் என் பயணத்தில்
வண்ணங்கள்
வாரி இறைத்து
திரும்புகிறேன் ..
தரைக்கு வந்ததும்
பதிவு செய்கிறேன்
புது புதுக்
கவிதைகளை..
உன்னால் தான்
அது சாத்தியமானது..
அந்த ஒரு முறை
நீ
என் மீது வந்து
அமர்ந்து விட்டுப் போனதிலிருந்து..!

11 comments:

Rekha raghavan said...

அருமையான வரிகள். நல்ல சிந்தனை.

ரேகா ராகவன்.

Thenammai Lakshmanan said...

யார் அந்த வண்ணத்துப் பூச்சி

யார்கிட்டேயும் சொல்ல மாட்டேன் சொல்லுங்க ரிஷபன்

நல்லா இருக்கு

புத்தாண்டு வாழ்த்துக்கள்

வசந்தமுல்லை said...

கொஞ்சம் மனசு, கொஞ்சம் கற்பனை,கொஞ்சம் கரு
இத்தனையும் கொண்ட கலைவைதான் கவிதை !
அந்த கவிதையை அந்த வண்ணத்து பூச்சியின் துணையோடு
காதலுடன் வடிக்கிறாய் ரிஷபன்!!!!
அருமை, எனக்கும் அந்த வண்ணத்து பூச்சியின்
துணையோடு கவிதை வடிக்க ஆசை!

ப்ரியமுடன் வசந்த் said...

அருமைங்க...பட்டாம்பூச்சியுடன் ஒரு வலம் அதை கவிதையிலும் கொண்டு வந்திருக்கிறீர்கள் நல்ல ரசனை...

ஹேப்பி நியூ இயர்

வெங்கட் நாகராஜ் said...

அந்த வண்ணத்துப் பூச்சியை இங்கேயும் கொஞ்சம் அனுப்பி வையுங்களேன் தலைவா, எனக்கும் கவிஞன் ஆக ரொம்ப நாளா ஆசை!

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ்
புது தில்லி

வசந்தமுல்லை said...

அனைவருக்கும் ஹாப்பி நியூ இயர் 2010!!!!!

திவ்யாஹரி said...

யார் அந்த வண்ணத்துப் பூச்சி?

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பா..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

கவிதை சூப்பர்.

ஹேமா said...

வண்ணாத்திப்பூச்சி எப்பவும் உங்களச் சந்தோஷமாக வச்சிருக்க வாழ்த்துக்கள் ரிஷபன்.

kovai sathish said...

வண்ணமாய் இருக்கிறது...!

கதம்ப உணர்வுகள் said...

எளிய நடையில் ஒரு அழகிய மெல்லிய மன உணர்வுகளின் கவிதை வரிகள்....
ஒருமுறை கொண்ட நட்பும்... ஒருமுறை பகிர்ந்த அன்பும் சிறகுகளாக மனதுடன் ஒட்டிக்கொண்டது என்று சொல்லிச்சென்ற விதம் அழகிய ஹைக்கூ.....

கவலைகள் திரண்டு மனதை அழுத்தும்போதெல்லாம் சிறகுகள் முளைத்துவிடும் ஆச்சர்யங்கள் தந்தது அன்பு பகிர்ந்த நட்பு தானே?
கவலைகள் துரத்தாத இடம் வரை பறக்க இயலும் சக்தி தந்தது அன்பு பகிர்ந்த நட்புதானே? மண்ணில் கிடைத்த சோகங்களை எல்லாம் விண்ணில் பறந்து வண்ணம் பரப்பி சோகங்களை எல்லாம் சந்தோஷங்களாய் மாற்றி அங்கும் அன்பை பதித்துவிட்டு உற்சாகத்தை கையோடு கொண்டுவந்து...ரிஷபன் டச் என்பது எப்போதும் கடைசி நான்குவரிகளில் நான் கூர்ந்து கவனிப்பது.. ரசிப்பது... மெய்மறப்பது... எப்படி இந்தப்பிள்ளையால் இத்தனை ரம்மியமாய் ரசனையாய் சிந்திக்கமுடிகிறது என்று... இந்த கவிதையிலும் அது காணமுடிகிறது....கடைசி நான்கு வரிகள் மிக மிக அட்டகாசம் ரிஷபா...

ஒரே ஒருமுறை நீ (நீ என்ற இந்த ஒரே ஒரு வார்த்தை ஆழ்ந்த பல அர்த்தங்களை சொல்லிச்செல்கிறது)அந்த நீ அன்பாய் இருக்கலாம்.. கனவாய் இருக்கலாம்... கற்பனையாய் இருக்கலாம்.... நட்பாய் இருக்கலாம்... ஆனால் அந்த அன்பு தந்த ஆத்மபலத்தை இந்த கவிதை உரக்கச்சொல்வதை வரி வரியாய் உணரமுடிகிறது ரிஷபா....

மூச்சாய் இயங்கிக்கொண்டிருக்கும் அன்பு அசாத்தியமானது.... கவலைகளை களைந்து சந்தோஷம் தரவல்லது... அந்த தூய அன்பை வண்ணத்துப்பூச்சியாய் கவலைகளை மறந்து திரியும் பட்டாம்பூச்சியாய் இங்கு உருவகப்படுத்தி அது தந்த சந்தோஷத்தை அற்புதமாய் அந்த அன்பில் கரைந்து வடித்த கவிதை வரிகள் மிக மிக அழகிய மெல்லிய சந்தோஷத்தீண்டல் ரிஷபா.... மென்மையான பூவைப்போன்ற மனம் கொண்டவரின் மனதில் பட்டாம்பூச்சியின் வண்ணமாய் ஒட்டிய அன்பும் சந்தோஷமும் என்றும் நிலைத்திருக்க அன்பு வாழ்த்துகள்பா...

மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் ரிஷபா...அழகிய கவிதைப்பகிர்வுக்கு....