July 03, 2010

கிங் க்வீன் ஜாக் - பகுதி 3

அத்தை ஊரிலிருந்து வந்திருந்தாள்.
பெண்ணுக்குக் கல்யாணமாம். பத்திரிகை வைத்து நேரடி அழைப்பு. "உமாவுக்கும் இவளுக்கும் ஆறு மாசந்தான் வித்தியாசம்"
அம்மா அதைக் காதில் வாங்காத மாதிரி நின்றதால், அத்தை இன்னொரு தரம் சொன்னாள்.

"அவனை நம்பாதே. கட்டு இருந்தாப் போதும். சோறு, தண்ணி வேண்டாம்"

அம்மாவின் முகம் இப்போதெல்லாம் என்ன நினைப்பு ஓடுகிறது என்று புலப்படுத்துவதில்லை.

"அவனை நீயாச்சும் திருத்தி வழிக்குக் கொண்டு வருவேன்னு பார்த்தோம். ம்ஹூம்.. உனக்கும் சாமர்த்தியம் இல்லே"

உறவுகளோடு எந்தவிதப் போக்குவரத்தும் ஏன் அம்மா வைத்துக் கொள்வதில்லை என்று உமாவுக்கு இப்போது புரிந்தது.

"ஏன் அத்தை.. இப்ப நீங்க பார்த்திருக்கிற மாப்பிள்ளையைப் பத்தி நல்லா விசாரிச்சுட்டீங்களா"

உமா இயல்பான குரலில்தான் கேட்டாள். அம்மாவுக்கு ஏதோ புரிய, பின்னாலிருந்து வேண்டாம்டி என்பது போல் சைகை செய்தாள்.

"நல்லா விசாரிச்சாச்சு.. ஒரு கெட்ட பழக்கமும் இல்லை. அவ்வளவு ஏன்.. அவரே மனசு விட்டு பேசினார்..என்னைப் பத்தி நானே சர்டிபிகேட் தரக் கூடாது. ஆனாலும் சொல்றேன். ஆபீஸ்ல எப்பவும் ஏதாவது பெரிய மனுஷா வந்தா, என்னைத்தான் அனுப்புவாங்க. கம்பெனி கொடுக்கணும். வர்றவனுக்கு ட்ரிங்க்ஸ் பழக்கம் இருந்தா ஹோட்டல் ரூமுக்கு வரவழைச்சு தரணும். முதல்ல ஒரு மரியாதைக்கு 'சிப்' பண்ணேன். அப்புறம் இதுவே பழக்கம் ஆயிரும்னு விட்டுட்டேன்னார்"

"ஓஹோ" என்றாள் உமா.

"பாரேன்.. என்ன வெளிப்படையா பேசறார்னு"

அத்தையின் முகம் பூரித்திருந்தது.

"குடிகாரன் பேச்சுன்னு ஏதோ சொல்வாங்களே.. அது மாதிரி ஆயிடப்போவுது. அப்புறம் உங்க பொண்ணு அவரைத் திருத்தலேன்னு கெட்ட பேர் வந்திடப் போவுது."

உமா பட்டென்று சொல்லி விட்டாள்.அத்தையின் முகம் செத்துப் போனது. பிறகு சுள்ளென்று கோபம் கொப்பளித்தது.

"என்னடி பேசறே"

"நீ விடு.. ஏய் உமா.. உள்ளே போடி"

அம்மா விரட்டினாள்.

"சும்மா இரும்மா. இத்தனை வருஷம் நாம எப்படி இருக்கோம்னு கவலைப்படாதவங்க இப்ப வந்து புத்தி சொல்றாங்க"

"உங்களை மதிச்சு உறவு விட்டுரக் கூடாதுன்னு வந்தேன் பாரு.. எனக்கு வேணும்"

அத்தை எழுந்து போய் விட்டாள்.

****************

தினகர் சிரித்தான்.

"ம்ம்.. அப்புறம்"

"அப்புறம் என்ன.. அம்மாவுக்கு என் மேல பயங்கரக் கோபம். என்னாலதான் அத்தை உறவு போச்சுன்னு"

"உனக்கு ஏன் அப்படி ஒரு கோபம் வந்தது?"

"தெரியலே தினகர். ஒரு வேளை அம்மாவை அத்தை இன்ஸல்ட் பண்ணது எனக்குப் பிடிக்காம அப்படி பேசிட்டேனா"

"ஊஹூம். அதை விடவும் வேற காரணம் இருக்கணும்"

உமா யோசித்தாள். கோபத்துக்கான காரணத்தை அறிய மூன்றாம் மனுஷி போல, நிகழ்ந்ததை மனத் திரையில் ஓட்டிப் பார்த்தாள்.

"உனக்கு உங்கம்மா மேலேயே கோபம் இருக்கு. இப்படி அநியாயமா ஏமாந்திருக்கக் கூடாதுன்னு"

தினகர் நிதானமாய்த்தான் சொன்னான். உமாவின் முகம் அப்படியே வாடிப்போனது.

தினகர் எப்போது நகர்ந்தான் என்று புரியவில்லை. உமாவால் மேலே பேச இயலாத மெளனம். உள்ளே குமுறல்களுடன் வெளியே அமைதி.

அம்மா பூத்தொடுத்துக் கொண்டிருந்தாள். சரமே விலைக்குக் கிடைக்கிறது. ஆனாலும், அம்மாவுக்கு உதிரிப்பூ வாங்கித் தொடுப்பதில் தனி சந்தோஷம். அந்த லாகவம் உமாவுக்கு வரவில்லை. முடிச்சு ஒழுங்காய் வந்தால் பூ விழுந்து விடும். பூ ஒழுங்காய் நின்றால் முடிச்சு தப்பிவிடும்.

"அம்மா"

'என்ன' என்று கேட்பது போல, நிமிர்ந்து பிறகு பூத்தொடுப்பதில் கவனம் திரும்பியது.

"எந்த மாறுதலும் இல்லாம.. வாழணுங்கிற நிர்ப்பந்தம் மட்டும் இருக்கிற மாதிரி.. நாம வாழறாப்ல இருக்கு"

அம்மா குனிந்திருந்ததால் என்ன உணர்வை முகம் பிரதிபலிக்கிறது என்று புரிபடவில்லை.

"அபத்தமா இருக்கும்மா"

"இப்ப என்ன செய்யணும்"

"எங்கேயாவது ஒரு பத்து, பதினைந்து நாள் போயிட்டு வரலாம். ஆனா திரும்ப இதே வாழ்க்கைக்குத் திரும்பணும். வேற ஊருக்கு மாற்றல் வாங்கலாம். அதுவும் ஆறு மாசம் இருந்தாப் பழகி,அலுப்பு வந்துரும்"

'நீயே யோசித்து முடிவு சொல்' என்கிற மாதிரி அம்மாவின் மெளனம் இருந்தது.

"செத்துப் போயிடலாம்னுகூடத் தோணுது"

சொன்னபிறகு உமா நாக்கைக் கடித்துக் கொண்டாள். சட்டென்று அந்த வரி விடுபட்டு விட்டது. எய்த அம்பு இனித் திரும்பாது.

அம்மா அழுதிருக்க வேண்டும். பூவுக்குத் தெளித்த நீருடன் இரண்டு சொட்டுக் கண்ணீரும் தெறித்தது. பாதி தொடுத்ததோடு எழுந்து போய் விட்டாள்.

பக்கத்து வீட்டாருடன் அவ்வப்போது புன்னகை பரிமாறியதுடன் சரி. வேறு விதமான உரையாடல்களோ, விசேஷ நாட்களில் இனிப்பு வழங்கிப் பெறுவதோ இல்லை.

இன்று வெளியில் வந்து நின்ற உமாவைப் பார்த்துச் சிரித்ததோடு நிற்காமல், நெருங்கியும் வந்து நின்றாள் பக்கத்து வீட்டுப் பெண்மணி.

"எங்க வேலை பார்க்கறே"

சொன்னாள்.

"என்ன சம்பளம் வரும்?"

லேசாய் எரிச்சல் வந்தது.

"எங்க குடும்பத்துக்குப் போதும்"

"அதுக்கில்ல.. உனக்குக் கல்யாணம் ஆயிருச்சின்னா, உங்க வீட்டுக்கு உன்னால பணம் எதுவும் தர முடியுமான்னு"

"நீங்க ஏன் அதுக்கு கவலைப்படறீங்க"

"பின்னே.. இத்தனை வயசாகியும் உன்னைக் கட்டிக் கொடுக்கணும்னு நினக்காம.. கம்முனு இருக்காங்களே.. கட்டிக் கொடுத்துட்டா.. உன் சம்பளப் பணம் போயிரும்னுதானே.. வளர்ந்த பெண்ணைப் புருஷனோடப் பார்க்கணும்னு பொறுப்பு வேணாமா"

எவ்வளவுதான் அண்டை அயலாருடன் விலகி இருந்தாலும், நம்மைக் கவனிப்பதும் நம் மீதான விமர்சனங்களுடன் அவர்கள் வாழ்வதும் தவிர்க்க முடியாது போலும் என்று, அந்த நிமிடக் கோபத்திலும் உமாவுக்குத் தோன்றியது.

தினகரின் பழக்கம் கற்றுத் தந்த உணர்வு அலசல் இது.

'நாம எப்பவும் தெளிவா இருக்க முடியும் உமா. அதனால என்ன பயன்னு நினைக்கறியா.. மத்தவங்களை நாம மாத்த நினைக்கறது வீண் வேலை. நம்மால அது முடியாத காரியங்கூட. நம்ம உணர்வை சரியான கோணத்துல பழக்கிட்டோம்னா.. எப்பவும் நிதானமா இருக்கலாம். குறைந்த பட்சம் மத்தவங்க நம்மை ஆளுமைப் படுத்த முடியாது'

உமா எதுவும் பதிலளிக்காமல் உள்ளே வந்து விட்டாள். அம்மாவும் இந்த உரையாடலைக் கேட்டிருக்க வேண்டும். இவள் வரும்போது அம்மா வழியில் நின்றிருந்தாள்.குளத்தில் எறியப்பட்ட கல் அலை எழுப்பாமல் விடுவதில்லை. உள்ளூர அடிமட்டத்தில் நிச்சலனமாய் இருந்தாலும் புறத்தில் தளும்பித்தான் ஆக வேண்டும் என்றும் உமாவுக்குத் தோன்றியது.

******

தினகர் 'குட் மார்னிங்' சொன்னதும் திருப்பிச் சொன்னாள்.

"நைட் சரியாத் தூங்கலியா"

"ம்"

"இன்னிக்கு லீவு போட்டிருக்கலாமே"

"ஸ்டேட்மெண்ட் முடிக்கணும்"

"ஹெல்ப் பண்ணவா"

"இல்லே.. நான் பார்த்துக்கறேன்"

"ஓக்கே"

போய்விட்டான். அவனிடம் இந்தக் குணம் அவளுக்குப் பிடிக்கும். பிறர் போல மேலே மேலே கேள்விகள் கேட்டு இம்சிப்பதில்லை.வேலை திருப்தியாய் முடிந்ததும் அரை மணி ஓய்வு கிடைத்தது.

மேனேஜர் அவளைப் பாராட்டிச் சொன்னதும் பிடித்திருந்தது. உள்ளூர வந்த பெருமிதம் யோசிக்கவும் வைத்தது.

'வார்த்தைகள் வருத்தமும், சந்தோஷமும் தர முடியுமானால்.. எப்படி விலகுவது'

தினகரிடம் பேச வேண்டும் போலிருந்தது.



(தொடரும்)

- கல்கியில் வெளிவந்த நாலு வாரத் தொடர்

1 comment:

அம்பிகா said...

இயல்பான எழுத்து நடை. தொடருங்கள்.