May 27, 2012

காலடியில் சூரியன்





எட்டி உதைப்பதை

எண்ணிப் பார்க்க முடிகிறதா?

காலடியில் சூரியனா..

கனவுகளில் மட்டுமே சாத்தியம்..

வாழ் நாளில் ஏதேனும்

சாதிக்க விரும்பினால்..

சுட்டெரிக்கும் சூரியனை

கால் பந்தாக்கும் லாவகம்

கைவசமாகட்டும்..

உலகத்தை ஒரு தரமாவது

உற்றுப் பார்க்க வைத்தால்

வாழ்ந்ததின் அர்த்தம்

வசப்பட்டு விடும்.



May 23, 2012

வாழ்க்கை






நீருக்குள்
மூச்சு திணறிய
மீனாகி விட்டதென்
வாழ்க்கை.
காற்றில்லா நேரம்
பறக்க முயன்றேன்..
கவலைகளை
தலையணை உறைக்குள்
அடைத்து வைத்து
உறங்கிப் போன
என் புத்திக்கு
புரியவில்லை ...
கால்களைக் கட்டிக் கொண்டு
பந்தயத்தில்
பெயர் கொடுத்தபோது
கற்று தர ஏதுமில்லை
இந்த பிரபஞ்சத்தில் ...










May 19, 2012

பிரிவு


என் பயங்களை
முதலில்
உன்னிடம்தான்
பகிர்ந்தேன்..
எனக்கான ஆறுதலும்
மகிழ்ச்சியும்..
ஏன்..
என் சில நேர
துக்கங்களும் கூட
உன்னிடம்தான்
இருந்தன..
நீ முகந்திருப்பிப்
போனதை
வாழ்வின் இறுதியாய்
உணர்ந்த அழுகை..
உன் அருகாமையில்
கரைந்து உலர்ந்தது..
எப்போதேனும்
உன்னைத் தவிர்த்து
என்னை நான்
யோசித்ததே இல்லை..
தற்செயலாய்
அடுத்த வீட்டில்
குடியேறிய
தேவதை நீ..
இப்போது சொல்..
எதற்காகவும்
கலங்காதிருக்கக்
கற்றுத்தரும் உனக்கு
உன் பிரிவில் கூட
அப்படியே இருக்க
இயலாமல் போனதேன்..


May 12, 2012

காதல் காதல் காதல் - 3

எனக்கு இப்படி நிகழும் என்று யாராவது போன மாதம் ஜோசியம் சொல்லியிருந்தால் நம்பியிருக்க மாட்டேன். சில நேரங்களில் உண்மை கற்பனையை விட சுவாரசியமானது.
எங்கள் தலைமை அலுவலகத்தில் ஒருவர் தனக்கு பழனி பஞ்சாமிர்தம் வேண்டும் என்று மெயில் அனுப்பியிருந்தார். எனக்கோ என்ன செய்வது என்று முதலில் புலப்படவில்லை. அப்புறம் தெரிந்தவர் ஒருவர் அவரது உறவினர் பழனியில் இருப்பதாகவும் அவரிடம் சொல்லி அனுப்பச் சொல்வதாகவும் உறுதி தந்தார்.
கடைசியில் அவர் உறவினர் செய்த ஏற்பாடு என்ன தெரியுமா? பழனியிலிருந்து வரும் அரசு போக்குவரத்து பேருந்தில் ஓட்டுநரிடம் கொடுத்து அனுப்பி விட்டு என்னைப் பெற்றுக் கொள்ள சொல்லி விட்டார். வேறுவழி? நானும் போனேன். பேருந்து எண் சொல்லியிருந்தார். வண்டி வந்து நின்றதும் அருகில் போனேன். 'பஞ்சாமிர்தம்' என்றதும் பையைத் தூக்கி கொடுத்தார். 'தேங்க்ஸ்.. ஆங் உங்க பேர்?' என்றேன் ஓட்டுநரிடம். 'முருகானந்தம்'
சியாமளா என்னுடன் ஒட்டிக் கொண்டதும் இதைப் போல ஒரு அதிசயம்தான். உளவியல் ரீதியாக இதற்குக் காரணங்கள் கற்பிக்கலாம். போன ஜன்ம விட்ட குறை தொட்ட குறையாகக் கூட இருக்கலாம்.
எதுவானால் என்ன.. நேசிப்பதும், நேசிக்கப் படுவதும் வாழ்வின் அர்த்தம் கூட்டுகிறது.
இந்த மூன்று மாதங்களில் எங்கள் மாடர்னைசேஷன் வேலை ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, சியாமளாவுடனான என் நட்பும் தொடர்ந்து கொண்டிருந்தது. வித்யா இரண்டாம் பட்சம் ஆகிற அளவுக்கு!
ஒரு நாள் வித்யா எனக்கு ஃபோன் செய்து தனக்கு வீடு திரும்ப தாமதம் ஆகும் அதுவரை சியாமளாவுடன் இருக்க முடியுமா என்று கேட்டாள். எனக்கென்ன.. ஒரு பிரச்னையும் இல்லை. பிறகு அதுவே வாரம் இரண்டு முறையாகிப் போனது. சியாமளா என்னுடன் மனரீதியாக ஒட்டிக் கொள்ள உதவியாகிப்போனது.
நடுவே என் வீட்டிற்கும் அழைத்துப் போனேன். அம்மாவுக்கும் ஏனோ சியாமளாவைப் பிடித்து விட்டது. அவளைத் திரும்ப கொண்டு போய் விட்டு விட்டு வந்ததும் அம்மா வாசலிலேயே நின்றிருந்தது புரிந்தது.
'என்னம்மா'
'மனசு சரியில்லைடா'
'புரியலை'
'சியாமளாவை பார்த்தால் கஷ்டமா இருக்குடா'
'அவளுக்குத்தான் அவ அம்மா இருக்காளே.. இப்ப நாமும் இருக்கோமே'
'இல்லைடா..'
அம்மா எதையோ மறைத்தாள். அவளின் உள்ளுணர்வு எதையோ உணர்த்தியிருக்க வேண்டும். அதை என்னுடன் பகிர மனசில்லை அம்மாவுக்கு.
மேலே ஃபால்ஸ் ஷீலிங் போட்டாகி விட்டது. டக்டிங் ஆரம்பித்து விட்டது. ஏசி யூனிட்கள் வந்து சேர்ந்து விட்டன. தரைத்தளம் புதுப்பித்து டைல்ஸ் சில பேருக்குப் பிடிக்கவில்லை.
'வழுக்குது. கிரிப் கிடைக்கலை' என்றார்கள்.
'பழகிரும்'
என்ன அற்புதமான வார்த்தை. 'பழகிரும்' எதுவுமே பழகி விடுகிறது காலப் போக்கில். துயரமும் சரி, இன்பமும் சரி. நிகழ்கிற நேரம் கிடைக்கிற அதிர்வுகள் தாற்காலிகம் மட்டுமே.
தற்செயலாகத்தான் அன்றைய தினம் இரண்டாவது மாடிக்குப் போனேன். மணி ஆறு. இந்நேரம் வித்யா வீட்டுக்குப் போயிருக்கலாம் என்கிற நினைப்பில் அவள் இருக்கையை எட்டிப் பார்த்தேன்.
வேலையில் மூழ்கிப் போயிருந்தாள்.
'வீட்டுக்குப் போகலியா'
'ம்ம்..' நிமிர்ந்தவள் நேரம் பார்த்தாள்.
'அடடா'
'என்ன'
'சியாமளா தனியா இருப்பா.. இன்னிக்கு அந்தம்மா வேற வரலே'
'டோண்ட் வொர்ரி.. நான் கிளம்பிட்டேன்.. நேரா அங்கே போறேன்.. உங்களுக்கு இன்னும் லேட் ஆகுமா'
'ம்.. ஒன் ஹவராவது ஆகும்..'
'ஓக்கே.. லீவ் இட் வித் மீ'
ஃபோன் செய்து விட்டேன் சியாமளிக்கு. அம்மாவுக்கும். வர லேட்டாகுமென்று.
சியாமளி ஒரு பெயிண்டிங்கில் ஆழ்ந்திருந்தாள்.
'பிளீஸ்.. இப்ப பார்க்காதீங்க அங்கிள். முடிச்சப்புறம் பார்க்கலாம்'
'ஓக்கே.. டீ வேணுமா'
தலையாட்டினாள். கிச்சனுக்குள் போனேன். தேநீர் வைத்தது கூடத் தெரியாமல் உதட்டைத் துருத்திக் கொண்டு சியாமளி வரைந்து கொண்டிருந்தாள்.
கைக்குக் கிடைத்த புத்தகத்தைப் பிரித்துப் படித்துக் கொண்டிருந்தேன். நேரம் போனது தெரியவில்லை.
சட்டென்று விழித்து வாட்சைப் பார்த்தால் மணி எட்டரை. ஏன் இன்னும் வித்யாவைக் காணோம்?
சியாமளி டீயைக் குடிக்கவில்லை. ஏடு தட்டியிருந்தது. அவளும் அப்படியே சோபாவில் சரிந்திருந்தாள். மிகவும் மெனக்கெட்டு வரைந்ததின் அலுப்பு.
சியாமளியின் கண்கள் மூடி ஆழ்ந்த சுவாசம். மெல்ல எட்டிப் பார்த்தேன். ஆ.. அப்படியே வித்யா. தத்ரூபமாய். கண்சிமிட்டியது ஓவியம் என்று கூடச் சொல்லலாம். அத்தனை உயிரோட்டம்.
என் மூச்சுக் காற்று பட்டு ஓவியம் கலைந்து விடப் போகிறது என்கிற பதட்டம் வந்த மாதிரி வேகமாய் நகர்ந்ததில் எதன் மேலோ மோதிக் கொண்டேன். கீழே விழுந்த சத்தத்தில் சியாமளி விழித்துக் கொண்டு என்னைப் பார்த்தாள்.
'ஸாரி..'
அதே நேரம் செல்போன் கிணுகிணுத்தது.
'காலிங் ஃப்ரம் சூர்யா ஹாஸ்பிடல்ஸ்.. நீங்க யார் பேசறது'
சொன்னேன். உள்மனதில் எதுவோ முனக ஆரம்பித்தது.
'ஸாரி ஸார்.. உடனே வரமுடியுமா.. ஒரு பேஷண்ட்.. வித்யா.. மெட் வித் அன் ஆக்சிடெண்ட்.. அவங்க செல்லுல உங்க நம்பர் பார்த்துட்டு கால் பண்ணோம்'
'சீரியஸா ஒண்ணும் இல்லியே'
'பிளீஸ்.. உடனே நேர்ல வாங்க' டிஸ்கனெக்ட் ஆகி விட்டது.
'என்ன அங்கிள்' என்றாள் சியாமளா.
எப்படி சொல்லப் போகிறேன்..

வித்யாவுடன் ஒரு வாரம் ஹாஸ்பிடலிலேயே இருந்தோம். அம்மா முதலில் வரவே சம்மதிக்கவில்லை. பிறகு அரைமனதாய் வந்தாள்.
'என்னால அழுகையைக் கட்டுப்படுத்த முடியாதுடா..'
ஆனால் துளிக்கூட அழாமல் நின்றாள். வித்யா அம்மாவின் முகம் பார்த்து ஏதோ சொல்ல முயன்றது போல் இருந்தது. தலையில் கட்டு. முகத்தில் ஆக்சிஜன். கையில் டியூப். அசையக் கூட முடியாத நிலை.
அம்மா வித்யாவின் கையைப் பற்றி அழுத்தியதில் இருவருக்கும் பேச்சு அவசியப்படவில்லை.
நானும் சியாமளியும் சேர்ந்தே உட்கார்ந்திருந்தோம். பசித்தால் சாப்பிடப் போவோம். அதுவும் என் வற்புறுத்தலால்.
'நீயும் வீக் ஆயிட்டா.. அப்புறம் அம்மாவை எப்படிக் கவனிக்கிறது'
கொறித்தோம். ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் அழுதது இருவருக்குமே தெரிந்ததில் இன்னும் மனசளவில் ஒட்டிக் கொண்டோம். நர்ஸ் வெளியே வரும்போதெல்லாம் எழுந்து அவள் எங்களைக் கவனிக்காத மாதிரி போனதும் தடுமாறினோம்.
'வி வில் ட்ரை அவர் பெஸ்ட்' டாக்டர் மேலே கையைக் காட்டினார்.
வித்யா டூ வீலரில்தான் வந்திருக்கிறாள். எதிரில் வந்த லாரிக்காரனுக்கு என்ன அவசரமோ.. நால்வழிப்பாதை வேலை நடந்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் பயங்கர மேடாக புதுச் சாலைக்கான மண் குவிப்பு. இந்தப் பக்கம் நெரிசலான டிராபிக்கில் பெயர்ந்து போன பழைய சாலை. ஒதுங்க முயன்று முடியாமல் தடுமாறிய நேரம் எதிரில் வந்த வேன் கிடைத்த இடைவெளியில் முன்னேறப் பார்த்திருக்கிறது. வித்யா வீசியெறியப்பட்ட நேரம் அதிர்ஷ்டவசமாய் ஒரு ஆம்புலன்ஸ் அந்த வழியே வந்திருக்கிறது.
சூர்யா ஹாஸ்பிடல்ஸின் ஆம்புலன்ஸ்.
எங்கள் ஆபீஸ்காரர்கள் வந்து பார்த்துப் போனார்கள். என் பாஸ் அருகில் வந்து உச்சு கொட்டினார்.
'நடுவுல ஒரு சேஞ்சுக்கு ஆபீஸ் வந்துட்டு போயேன்'
'ஸாரி ' என்றேன்.
'ஓக்கே..ஓக்கே' போய்விட்டார்.
சியாமளி என் மடியில் தூங்கினாள். இப்போது எந்த உறுத்தலும் இல்லை.
வித்யா எங்களுடன் பேசினாள். டாக்டரின் அனுமதியுடன். அவருக்கும் வேறுவழி இருக்கவில்லை. எங்களின் முகம் பார்க்க மறுத்து வித்யாவுடன் பேச அனுமதித்தபோதே புரிந்து விட்டது.
இருவரும் ஒரே பக்கமாய் நின்றோம் வித்யாவின் எதிரில்.
'ஸாரி..' என்றாள் வித்யா என்னிடம்.
'சேச்சே'
'சியாம்.. ஸாரிடா'
'அம்மா.. ரொம்ப வலிக்குதா'
'இனிமே வலி இருக்காதுடா'
'அ..ம்மா'
'அங்கிள் மேல ஏன் இவ்வளவு பாசமா இருக்குன்னு புரியலேன்னியே.. '
'அ..ம்மா'
'பெரிய பொறுப்பையே தரேன்..'
'ஷீ ஈஸ் மைன்'
என் குரலில் அப்பட்டமான உறுதி இருந்தது.
சியாமளியின் கையைப் பற்றிக் கொள்ளுமுன் என்னைப் பார்த்தாள்.
'வேற மாதிரி நினைச்சிருந்தேன்.. ப்ச்.. விதி வேற மாதிரி மாத்திருச்சு'
'பிளீஸ் வித்யா..'
'சியாம்'
இருவர் கைகளும் இணந்திருந்தன.. வித்யாவின் கடைசி மூச்சு பிரிகிறவரை.
சியாமளி அழுதாள். நான் தடுக்கவில்லை. அழுது ஓயட்டும்.
சியாமளி இப்போது எங்களூடன் இருக்கிறாள். நான் இருக்கும் நேரங்களில் மூவருமாய். இல்லாத நேரங்களில் அம்மாவுடன்.
அம்மாவுக்குத்தான் வருத்தம். நான் கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்று.
என்னையும் சியாமளியையும் சேர்த்து நேசிக்கத் தயாராய் இருக்கிறவள் யாரேனும் உண்டா.. சொல்லுங்கள்.
இப்போதே சிம்பிளாய் கல்யாணம் செய்து கொள்ள நான் ரெடி.
அதுவரை ஒரு அற்புதமான காதல் என் வாழ்க்கையிலும் கிராஸ் செய்து விட்டுப் போனதன் அடையாளமாய் வித்யாவின் ஓவியமும், அவள் விட்டுச் சென்ற சியாமளியும் என் இன்றைய வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொண்டிருக்கிறது.
நான் செய்தது சரியா.. என்று விமர்சிக்கிற என் அலுவலக நண்பர்கள்.. ஏன் நீங்கள் கூடத்தான்.. 'ஏன் இப்படி' என்கிற கேள்வி உங்கள் வாழ்விலும் ஒரு முறையேனும் குறுக்கிட்டதில்லையா.. மனசாட்சியோடு யோசித்துச் சொல்லுங்கள்?
அதுவரை.. அதோ சியாமளியின் குரல் கேட்கிறது.. ஆரார் சபாவில் இன்று பெயிண்டிங் கண்காட்சி.. நாங்கள் கிளம்பிக் கொண்டிருக்கிறோம். வரட்டுமா?!

தேவி 16.05.12

May 05, 2012

காதல் காதல் காதல் - 2

பெண்கள் எப்போதும் ஏதோ ஒரு வகையில் சர்ச்சைக்கு உரியவர்கள் ஆகிவிடுகிறார்கள், ஆண்களிடம். அடுத்த மேஜை நண்பரின் முகம் சிவந்திருந்தது. அவரைச் சுற்றி சிலர்.
'
அப்படி என்ன தப்பா கேட்டுட்டேன்.. புரபோசல் என்ன ஆச்சுன்னு கேட்கப் போனேன். மரியாதைக்கு விசாரிச்சேன். நேத்து உங்களைத் தேடினேன்.. ஹாஸ்பிடல் போனதாச் சொன்னாங்க. பையன் எப்படி இருக்கான்னு கேட்டேன். அது தப்பா?'
'
என்ன ஆச்சு'
'
கடிச்சுட்டாங்க.. உங்க ஃபைல் பத்தி கேளுங்க. தட்ஸ் எனஃப்..னு'
கிளம்பியவன் அப்படியே பிரேக் அடித்தேன்.
எனக்கும் அதே பதில்தான் கிடைக்குமா? போய் வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டுமா.. அம்மா சொன்னதை நிறைவேற்ற முடியாது போலிருக்கே.
ஆனால் போக வேண்டியிருந்தது. மதியம் மீட்டிங் என்பதால் வித்யாவைப் பார்த்து ஞாபகப்படுத்தி விட்டு வேறு சில ஃபைனான்ஸ் சம்பந்தமான கேள்விகளைக் கேட்டு வரச் சொன்னார் பாஸ்.
தலை குனிந்து ஏதோ எழுதிக் கொண்டிருந்தவளை சில வினாடிகள் பார்த்துக் கொண்டிருந்தேன்.
"
ம்க்கும்"
"
யெஸ்.. பிளீஸ்"
"
டிஸ்டர்ப் பண்ணலாமா"
"
நோ ஃபார்மாலிட்டீஸ்"
வந்த வேலையை முடித்துக் கொண்டு விட்டேன். குரல் திடீரென கரகரத்தது.
"
வந்து.. உங்க குழந்தைக்கு இப்ப தேவலையா.. ஜஸ்ட்வொர்ரீட்"
நிமிர்ந்து என்னைப் பார்த்தாள். இதோ இப்போது அடி விழப் போகிறது. வார்த்தை அடி. என்னையும் அறியாமல் என் கண்களை மூடிக் கொண்டுவிட்டேன். கடவுளே.. கடவுளே..
"...."
என்ன சொன்னாள்.. கண்ணைத் திறந்து பார்த்தேன்.
"
தேங்க்ஸ்.. "
"
எ..துக்கு.."
"
குழந்தையைப் பத்தி கேட்டதுக்கு.. அவ பிறந்தப்பவே கொஞ்சம் வீக்.. மாசம் ஒரு தடவை டாக்டரைப் பார்த்தாகணும்.. வளர்ந்தா சரியாயிரும்னு டாக்டர் சொல்றார்.. ஆக்டிவ்வாதானே இருக்கா.. ஏன் வொர்ரி பண்றீங்கன்னு.."
பெண் குழந்தையா..
"
பேரு.."
"
சியாமளா.. ப்ச்.. மார்னிங் ஒருத்தர்.. உங்க டிபார்ட்மெண்ட்.. என்ன குழந்தைன்னுகூடத் தெரியாம.. பையன் எப்படி இருக்கான்னு ஒப்புக்கு விசாரிச்சப்ப.. கொஞ்சம் டிஸ்டர்ப் ஆயிட்டேன். பர்சனலா ஒரு கேள்வி கேட்கறப்ப மனசு பூர்வமா அது இருக்கணும்னு நான் நினைக்கறேன்.. அப்படி இல்லாம இருந்தா எனக்கு அது பிடிக்கறதில்லே.."
தேங்க் காட்! அம்மா நீ வாழ்க!
"
வீட்டுல பார்த்துக்க யாராச்சும் இருக்காங்களா"
"
ம். சர்வன்ட் மெய்ட்.. ஆனா அவங்க மோர் தேன் தட்.. என் சிஸ்டர் மாதிரிதான்.."
"
வ..ந்து.. சி..யாமளியோட அ..ப்பா.."
எனக்குக் கொஞ்சம் கொழுப்புத்தான். இந்த அளவு வித்யா என்னை அனுமதித்ததே பெருசு. அதில் இப்படி ஒரு கேள்வி அவசியமா.. இந்த யோசனையை மீறி என் கேள்விக் கணை பாய்ந்துவிட்டது.
கூடவே பதறினேன்.
"
ஸாரி.. வெரி வெரி ஸாரி..ரொம்ப பர்சனலா ஏதோ கேட்டுட்டேன்.. எக்ஸ்ட்ரீம்லி ஸாரி"
வித்யா நிதானிப்பது புரிந்தது. அவள் முக இறுக்கம் கலைந்து இயல்பானது.
மேஜை வெயிட்டை உருட்டினாள்.
"
மீட்டிங்ல பார்ப்போம்"
எழுந்தேன். திரும்பிக் கூட பார்க்காமல் பாதி ஓட்டமும் பாதி நடையுமாய் வந்து விட்டேன். என் அதிர்ஷ்டத்தை ரொம்பவும் சோதித்து விட்டேன் இன்று. நல்ல வேளை.. எதுவும் விபரீதமாய் நிகழவில்லை. இனி இப்படி ஒரு அசட்டுத்தனம் செய்து விடக் கூடாது.
மதியம் மீட்டிங்கில் மேனேஜ்மெண்ட் சர்வீசஸ், மெயின்டெனன்ஸ் அன்ட் சர்வீசஸ், ஃபைனான்ஸ், பர்ச்சேஸ் எல்லோரும் வந்து விட்டோம். டெக்னிகல் விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. டெண்டர் விடுவது பற்றி பரிசீலிக்கப்பட்டது. சிவில் வொர்க், ஒயரிங், மாடுலர் ஆபீஸ் டிசைனிங் இப்படி ஒரேயடியாக ஹெவி மேட்டராக ஓட என் கவனமும் அதிலேயே இருந்ததால் வித்யாவை அவ்வளவாகக் கவனிக்கவில்லை. அதுவும் நன்மைக்குத்தான் என்று நினைத்தேன்.
மீட்டிங் முடிந்து ஒவ்வொருவராகப் போய் விட்டார்கள். நானும் வித்யாவும் மட்டும். என் ஃபைல்களை அள்ளிக் கொண்டு ஏசி அறையின் கதவைத் திறந்து வித்யா வெளியே செல்ல வழிவிட்டு நின்றேன்.
"
அப்புறம் முடிஞ்சா என் ஸீட்டுக்கு வாங்க.. நாட் அர்ஜெண்ட்" என்றாள்.
அவள் முகத்தில் சிநேகப் புன்னகை!
எப்படி?.. இந்தக் கேள்வி நம் வாழ்நாள் முழுவதும் ஏதோ ஒரு வகையில் துரத்திக் கொண்டிருக்கிறது. சாதித்தாலும் சரி.. தோற்றாலும் சரி..சந்தோஷித்தாலும் சரி.. துக்கித்தாலும் சரி.. எப்படி ஆச்சு..?
வித்யாவின் கணவன் ஜஸ்ட் லைக் தட் அவளை விட்டு பிரிந்து போவதாய்ச் சொல்லிவிட்டு போனதும், அவள் கைக் குழந்தையுடன் இங்கு மாற்றலாகி வந்ததும் சாதாரணமாய் சொல்லிக் கொண்டு போனாள்.
எதிரில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த எனக்குத்தான் தாங்க முடியவில்லை.
நமக்குப் பிரியமானவர்களின் வருத்தம் நம்மையும் சங்கடப்படுத்திவிடும்போது நம்மையும் அறியாமல் கண் கலங்கும். இந்த நிமிஷத்தில் எனக்கும். அதை வித்யா கவனித்திருக்க வேண்டும்.
"
எனக்கு அனுதாபம் பிடிப்பதில்லை.. அது என்னை பலவீனப்படுத்தி விடும். சூழ்நிலை மீறி ஜொலிப்பதில்தான் என் கவனம் இருக்கும் எப்போதும்."
கர்ச்சீப்பால் ஒற்றிக் கொண்டேன் நாசூக்காக.
"
நான் சியாமளியைப் பார்க்கலாமா"
வித்யா இந்தக் கேள்விக்கு மறுக்கப் போகிறாள் என்றுதான் நினைத்தேன்.
"
ஓயெஸ்.. இந்த ஸண்டே?"
அட்ரஸ் கார்டை நீட்டினாள். "வருவதற்கு முன்னால் கிவ் மீ எ ரிங் பிளீஸ்"
எங்கள் தளத்தில் இருந்த அலுவலர்கள் எல்லோரையும் தளத்தின் மூலையில் இருந்த பெரிய கான்பரன்ஸ் ஹாலுக்கு மாற்றினார்கள். சிவில் வேலை எங்கள் அலுவலக சிவில் துறையே ஏற்றுக் கொண்டது. இடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
கான்பரன்ஸ் ரூம்தான் பிரச்னையானது. அத்தனை பேரையும் ஒரே இடத்தில் அடைத்ததில் இட நெருக்கடி. எல்லோருடைய மேஜையிலும் கணிணி. நடக்க மிகக் குறுகிய இடம். ஹால் இடிக்க ஆரம்பித்ததில் புழுதி ஏசி அறையில் படிய ஆரம்பித்து தொடர் இருமலை வரவழைத்தது. இதில் நடுவே ஒரு முறை மானிட்டர் புகைந்து எந்த ஸ்விட்சை ஆஃப் செய்வது என்று அல்லாடியதில் குழப்பம்.
'
யாரோட ஐடியாங்க இது.. இத்தனை பேரை இங்கே உட்கார வச்சது'
ஸேஃப்டி டிபார்ட்மெண்ட் ஆட்கள் வந்து சத்தம் போட்டார்கள். எலக்டிரிகல் டிபார்ட்மெண்ட்காரர்களோ அவர்களுக்குத் தகவலே தரவில்லை என்று பல்டி அடித்தார்கள்.
எந்த வேலையிலும் பிரச்னைகள் வரக்கூடும். அதைத் தீர்க்கும் வழிமுறைகளை ஆலோசிப்பதை விட்டு யார் இன்சார்ஜ் என்று மண்டையை உருட்டுவதுதான் சாதாரணமாய் நிகழ்வது. எனக்குக் கிடைத்து வரும் முக்கியத்துவம் பொறுக்காத சிலர் இந்த நெருக்கடி நிலையைப் பயன்படுத்திக் கொண்டார்கள்.
'
மாடர்னைசேஷன் என்ன பண்றாங்க.. இதையெல்லாம் யோசிச்சிருக்க வேண்டாமா'
'
எங்கே ஸ்டைலா மீட்டிங் போகத்தானே நேரம் இருக்கு.. பாதுகாப்பு விதிமுறை பத்தி யாருக்கென்ன கவலை'
ஜிஎம் அழைத்தார்.
'
என்னப்பா.. என்ன பிரச்னை'
'
ஸார்.. முன்னாடியே எல்லாருக்கும் சொன்னதுதான். இந்த வேலை முடியறவரை நாம அட்ஜஸ்ட் பண்ணியாகணும்னு. அப்ப எல்லோரும் சரி..சரின்னுட்டு இப்ப சிக்கல் பண்றாங்க.'
'
ஃபயர் ஆயிருச்சாமே'
'
ஆமா ஸார்.. நல்ல வேளையா விபரீதமா எதுவும் நடக்கலே..'
'
எப்ப முடியும்'
அந்தக் கேள்வியை அவர் கேட்கக் கூடாது. ஜீரோ தேதி முதல் முடிவு தேதி வரை அவர் ஒப்புதல் பெற்றே வேலை ஆரம்பித்திருக்கிறது.
'3
மாசம் ஸார்.. செப்டம்பர்ல புது மாடுலர் ஆபீஸ்ல எல்லோரும் இருப்போம்'
'
இன்னொரு தடவை எதுவும் பிரச்னை வராம பார்த்துக்குங்க'
புகை நெடி இன்னும் முழுமையாகப் போகவில்லை. என்னைப் பார்த்து மற்றவர்கள் கை நீட்டி புகார் பேசுகிற பிரமை என்னுள்.
மெயில் வந்திருந்தது. டெண்டர் விட்டதில் எல் 1 ஆக இருந்தவர் திடீரென தம்மால் முடியாது என்று மறுத்திருந்தார். என் பாஸிடம் ஓடினேன்.
'
போச்சுரா.. இப்ப மறுபடி இல்லே நெகோஷியேஷனுக்குக் கூப்பிடணும்.'
மீண்டும் ஜிஎம் அறை. சலித்துக் கொண்டார்.
'
இத்தனை வருஷம் குப்பை கொட்டியிருக்கீங்க.. எவன் ஒழுங்கா சப்ளை பண்ணுவான்னு தெரியாதா?'
'
ஸார்.. எல் 1..'
'
இந்த சால்ஜாப்பெல்லாம் வேண்டாம்.. இப்பவாச்சும் கரெக்டா பேசுங்க. நம்ம தேவை என்ன.. அவன் கெபாசிட்டி என்ன.. இதையெல்லாம் பாருங்க.. வேர்ல்ட் மார்க்கட் போயாச்சு.. சுண்டைக்காய் மாடுலர் ஆபீஸுக்கு திணர்றோம்னா வழிச்சுகிட்டு சிரிக்க மாட்டாங்க'
ஜிஎம்முக்கு பொறுமை பறிபோனால் பிரயோகங்களில் நாசூக்கு குறையும்.
'
யெஸ் ஸார்.. பார்த்துக்கிறோம் ஸார்'
வெளியே வந்ததும் பொறுமினேன்.
'
இதுல நம்ம தப்பு என்ன ஸார்..'
'
ஹையர் அப்ஸ்கிட்டே எதுத்து பேச முடியாது..'
நாளை சண்டே என்பது இந்தக் கோபத்தில் எனக்கு சுத்தமாய் மறந்து போனது.
விளம்பரங்களில் சிறுமிகளைப் பார்த்திருக்கிறீர்கள்.. சோனியாய்த்தான் இருப்பார்கள். ஆனால் ஏதோ ஒரு வித துறுதுறுப்பும் கண்களில் ஒளியுமாய்க் கவர்ந்து விடுவார்கள்.
சியாமளியும் அப்படித்தான். இதில் பியூட்டி என்னவென்றால் அவளே எனக்கு ஃபோன் செய்தாள்.
"
அங்கிள்.. என் பேர் சியாமளி.."
முதலில் எனக்கு சட்டென்று நினைவுக்கு வரவில்லை. பாத்ரூமில் டவல் கட்டிக் கொண்டு நுழையும்போது செல்போன் கிணுகிணுத்தது. வேகமாய் ஓடி வந்து எடுக்கவும் இந்தக் குரல்.
"
ச்யா.." ஆஹா.. வித்யாவின் பெண். கடவுளே இன்று ஞாயிறு!
"
ஹை.. செல்லம்.. எப்படி இருக்கே.."
"
ஃபைன்.. எப்ப வரீங்கன்னு கேட்கத்தான் ஃபோன் பண்ணேன்"
"
இன்னும் ஒன் ஹவர்ல உன் முன்னால இருப்பேன்.. பை த வே.. உனக்கு என்ன ரொம்பப் பிடிக்கும்"
"
என் ஹாபி பெயிண்டிங் அங்கிள்"
இதுவும் எனக்குப் பிடித்தது. சும்மா ஃபஸ் பண்ணாமல் தன் விருப்பம் சொன்ன விதம். வீட்டிற்குள் நுழையும்போதே எதிரில் வந்து விட்டாள்.
"
ஹை.. அங்கிள்"
"
நான் தான்னு எப்படித் தெரியும்?"
"
அ..ங்..கி..ள்.." ஒரு விதமாய் இழுத்தாள். அப்படியே அம்மா.
கையைத் தூக்கினேன். "ஸரண்டர்"
ஒரு ஓவியம். கூடவே பெயிண்டிங் மெடிரியல்ஸ். கிப்ட் பார்சலைக் கொடுத்ததும் நன்றி சொன்னாள்.
"
வாவ்.. எனக்கு ரொம்பப் பிடிக்கும்.. லைன் ஸ்கெட்ச்.. முழுமையான பெயிண்டிங் ஒரு ரகம்னா.. லைன் டிராயிங் தனி ரகம். ரெண்டு கோட்டுல ரியல் லைஃப் கிடைச்சுரும்.."
அவள் கண்களில் ஈடுபாடு தெரிந்தது. 'கோகுல் ஸாந்தல் ரியல் சந்தனம்' என்று விளம்பரத்தில் வரும் சிறுமி போல அழகாய் விரலை ஆட்டி சொன்னாள்.
'
சின்ன வயசுல நானும் கிறுக்கி இருக்கேன்.' என்றேன்.
'
'
'
உன் ஸ்கெட்சஸ் பார்க்கலாமா'
நிச்சயம் அவை வெறும் கோடுகள் அல்ல. எந்த விதியிலும் அடங்காதவை. கண்ணில் பட்ட எதுவும் சியாமளியின் பென்சிலுக்குத் தப்பவில்லை. குறிப்பாய் ஒரு படத்தில் அப்படியே லயித்துப் போனேன்.
'
மேரேஜ் இன்விடேஷன்ல இருந்தது..' என்றாள்.
மணமகன், மணமகள் இருவரையும் கோட்டோவியமாய் வரைந்திருந்தாள்.
'
உனக்கு என்ன வயசு சியாமளி' என்றேன் சீரியசாய்.
ரசித்துச் சிரித்தாள்.
'66'
'
உன் ஓவியங்கள் அப்படித்தான் சொல்கின்றன'
'
எனக்கு வயசு ஏழு தான் அங்கிள்'
வித்யாவுக்கு ஏழு வயது மகள் இருக்கிறாள் என்பதே நம்ப முடியாததாய் இருந்தது.
'
ஒரு நிமிஷம்.. அப்படியே இரு.. பிளீஸ்'
பக்கத்தில் இருந்த வெள்ளைத் தாளில் பென்சிலால் கிடுகிடுவென கிறுக்கினேன்.
'
இந்தா..'
ஏறக்குறைய 'சியாமளி' என் கை வண்ணத்தில்.
'
நீங்க பாஸ்' என்றாள் சிரிப்புடன்.
வித்யா டீ கோப்பைகளுடன் வந்தாள்.
'
என்ன.. ரெண்டு பேரும் பயங்கர ஃப்ரெண்ட்ஸ் ஆயிட்டீங்க'
'
ஆமா' என்றோம் கோரஸாய்.
பேசினோம். மணிக்கணக்கில். நடுவே கொறிக்க.. குடிக்க என்று ஏதேதோ வித்யா கொண்டு வந்து வைத்தாள். பேசிக் கொண்டே சியாமளி ஒரு கட்டத்தில் படுத்துக் கொண்டு விட்டாள், என் மடியில்!
தூங்கியும் போய் விட்டாள்.
இந்த முறை என் கண்கள் கலங்கியதை நான் மறைக்கவில்லை. வித்யாவிடம் சொன்னேன். அம்மா மடி பற்றி. வித்யா சியாமளியை எடுத்துக் கீழே விட முயன்றாள். தடுத்து விட்டேன்.
'
அப்படியே இருக்கட்டும்'
'
ச்சே.. எதுக்கு சிரமம்'
'
இல்ல வித்யா.. ப்ளீஸ்..'
வித்யா சட்டென்று எழுந்து போய்விட்டாள். எனக்குள் குழப்பம். ஏன் இப்படி நடக்கிறது.. நிஜமாய் இந்தப் பெண் என் மீது பிரியம் வைத்திருக்கிறதா.. அதுவும் துளிக்கூட பழகி இராத ஒரு அன்னியனிடம் எப்படி சாத்தியம்? இது நீடிக்குமா.. இதன் பின் விளைவுகள் என்ன..
சியாமளி எழுந்து விட்டாள்.
"
தேங்க்ஸ் அங்கிள்"
நோ ஸாரி பிசினஸ்! இதுவும் எனக்குப் பிடித்திருந்தது. சுவாதீனம்.
"
சியாம்.."
என்னைப் பார்த்தாள். அவள் கையைப் பற்றிக் கொண்டேன்.
"
உன் நண்பர்களில் ஒருவனாக எப்போதும் நான் இருக்க வேண்டும்.."
"
கிராண்டட்" என்றாள் கம்பீரமாக.
"
இன்னும் என்னால நம்ப முடியலே.. யூ ஆர் நாட் அ சைல்ட்"
"
சைல்ட்னு நான் சொல்லலியே"
திரும்பி வரும்போது எனக்குள் அலையடித்துக் கொண்டிருந்தது. எண்ண அலைகள்!



(தொடரும்)

(தேவி - 09.05.2012)


May 03, 2012

காதல் காதல் காதல் - 1

சில சினிமாப் பாடல்கள் கேட்டவுடன் பச்சக்கென்று மனதில் ஒட்டிக் கொண்டுவிடும். மனசுக்குள் டேப் ஓடிக் கொண்டே இருக்கும். அந்த மாதிரி சில மனிதர்களும். அதிலும் குறிப்பாய் அழகான பெண்கள். இங்கே அழகு என்று சொல்வது மனசைக் கவர்கிற ஏதோ ஒன்று. புற வடிவம் மட்டுமல்ல.
அப்படித்தான் வித்யா என்னைக் கவர்ந்தாள்.
'
ரெண்டாவது மாடிக்குப் போ. கடைசி காபின். உன் புரபோசல் அவகிட்டேதான் இருக்கு. நேத்தே நாம வென்டார்க்கு பதில் போட்டிருக்கணும்'
என் பாஸ் அனுப்பியபோது அரைமனதாய்த்தான் விவாதித்து விட்டு கிளம்பினேன்.
'
ஸார்.. ஃபைனான்ஸ் கேட்ட எல்லா டிடெய்லும் இருக்கு. அவங்க ரைஸ் பண்ண குவெர்ரீஸ்க்கு பதில் சொல்லியாச்சு. ஃபைலை ஒவ்வொரு தடவையும் நாமதான் கொண்டு போய் கொடுக்கறோம். திரும்பப் போய் வாங்கறதும் நாமதான். அப்புறம் அவங்க ரெஸ்பான்சிபிலிட்டிதான் என்ன?'
'
கணேஷ்.. போங்க. இது நம்ம வேலை. நாமதான் அல்டிமேட்லி ரெஸ்பான்சிபிள்'
என்னுள் கோபம் எழும்போது தரையில் மானசீகமாய்க் காலை உதைப்பேன். இப்போதும். படியிறங்கிப் போகும்போது (லிப்டை முடிந்தவரை தவிர்ப்பது என் பழக்கம்) எதிரில் கோமதி வந்தாள்.
"
என்ன மேடம்.. லஞ்சுக்கா.. எனிதிங் ஸ்பெஷல்"
"
இன்னிக்கு நானே கேண்டீன் தான். நீங்க சாப்பிடப் போகலியா. மணி ஒன்றரை"
"
மணி பார்த்து சாப்பிட.. எனக்கு இனி அடுத்த ஜென்மத்துலதான் முடியும்"
இரண்டாவது மாடியில் கடைசி கேபின் நெருங்கும்போது நான் இதுவரை பார்த்திராத அந்த நபர் குறித்த முழு கோபம் மனசுக்குள் ஜ்வாலைகளாய் அனலடித்தது.
"
என்ன.. எப்பதான் ஃபைல் கிளிய.."
வார்த்தைகள் உதடுகளைத் தாண்டாமல் தொற்றிக் கொண்டு நின்று விட்டன. அப்படியே ஊஞ்சலாடின.
"
யெஸ்.. பிளீஸ்"
முகத்தை எப்போதும் மூடி வைக்காதே.. எந்தன் நெஞ்சத்தை முள்ளில் தைக்காதே.. மனசுக்குள் டேப் ஓட ஆரம்பித்து விட்டது.
"
சொல்லுங்க ஸார்.. எனி ப்ராப்ளம்"
அதான் ப்ராப்ளமே.. அழகாய் உதடுகளைக் குவித்து.. எனி ப்ராப்ளம் என்றால் என் இதயம் லேசாய் நின்று இயங்குகிறதே.. ரசாயன மாற்றங்களைத் தாங்க முடியாமல் உடம்பு நடுங்கியது.
"
ஹி..ஹி.. சும்மா.. ஃபைல் பார்க்க வரலே.. நீங்க மெதுவா அனுப்புங்க.."
"
ஓ.. பர்ச்சேஸா.. உங்க ஃபைல் இதானே.. கம்பேரிடிவ் ஸ்டேட்மெண்ட் நீங்க போட்டதா"
பிரித்துக் காட்டிய பக்கத்தில் இப்போது பளிச்சென்று தெரிந்த தப்பு.. முன்பு ஏன் தெரியவில்லை?!
"
ஸாரி.. "
வசீகரமாய்ச் சிரித்தாள்.
"
ஜெனரலா உங்க புரபோஸல்ல தப்பே வராது. கவனிச்சிருக்கேன். இந்த தடவை நோட்டீஸ் பண்ணதும் உங்களை நேர்ல பார்க்கணும்னு தோணிச்சு. அதனாலதான் ஃபைலை அப்படியே வச்சுட்டேன்."
"
யூ ஆர் ஃபிட் ஃபார் மேனேஜ்மெண்ட்.."
புரியாத மாதிரி பார்த்தாள்.
"
எல்லாம் சரியா போகும்போது ஒண்ணும் சொல்லமாட்டாங்க. தப்பு பண்ணா மட்டும் கூப்பிட்டு ஃபயர் பண்ணுவாங்க"
இதற்கும் சிரிப்புத்தான் அவளிடம். சிரிப்பு என்றால் உதடு பிரியாமல் கண்ணும் முகமும் பூபூக்கும் சிரிப்பு. எக்ஸெல் காலை வாரி விட்ட என் ஃபார்மேட்டில் தேவையான திருத்தம் செய்து மறுபடி கொண்டு போய் கொடுத்தபோது அடுத்த புரபோஸல் எனக்கு எப்போது வரும் என்று மனசு ஏங்கியது. அதையே வாய் விட்டு சொல்லி விட்டேன்.
"
முன்னால எனக்கு புரபோசல் வந்தா லேசா எரிச்சல் வரும். எப்ப பாரு எனக்கே வேலை வைக்கிறாங்கன்னு. இப்ப அடுத்த புரபோசல் எப்ப வரும்னு இருக்கு"
"
ஏன்.."
"
அப்பதானே உங்களை.." நிறுத்தி விட்டேன்.
அளவுக்கு மீறி ஜொள் விடுவதை மனசு உணர்த்தியது.
"
தேங்க்ஸ்" என்றாள் இயல்பாக.
"
எதுக்கு"
"
யாராவது காம்ளிமெண்ட் பண்ணா நன்றி சொல்ல வேண்டாமா"
ஒரு விஷயம் நான் சொல்லியே ஆக வேண்டும். அழகான பெண்கள் அவர்கள் அழகாய் இருப்பதை உணர்ந்து இயல்பாகவும் இருந்தால் அவர்களின் வசீகரம் இரட்டிப்பாகி விடுகிறது.
இருக்கைக்குத் திரும்பினால் இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது எனக்கு..

எங்கள் அலுவலகக் கட்டிடம் கொல்கத்தா கட்டிடங்களை ஞாபகப்படுத்தும்! அத்தனை பழசு. நடுவில் 15 வருடங்களுக்குப் பிறகு வெள்ளை அடித்தார்கள். கணிணிகள் எல்லோர் மேஜையிலும் இருக்க, அதற்கான பவர் கனெக்ஷன் ஒயர்கள் குறுக்கே போகும். தடுக்கி விழாமல் இருக்க நடக்கிற பாதையில் ஒயர்களின் மீது ரப்பர் ஷீட் போட்டிருப்பார்கள். அதிலும் ஃபைனான்ஸ் டிபார்ட்மெண்ட் அரதப் பழசு. எஅத ரெக்கார்டையும் தூக்கிப் போடாமல் ஆடிட் அது இது என்று காரணம் சொல்லி மூட்டை கட்டி வைத்திருப்பார்கள். அரசு அலுவலகத்தை நினைவுபடுத்தும்!
யார் மனதில் தேவதை புகுந்ததோ.. மொத்தமாய் குளிரூட்டலாம் என்று ஒரு திட்டம் உருவானது. முதல் கட்டமாய் ஐந்து மாடிகளில் ஐந்தாவது மாடியில் இருக்கும் எங்கள் பர்ச்சேஸ் டிபார்ட்மெண்ட்டை பொலிவுபடுத்தலாம் என்று டெண்டர் விட்டார்கள்.
மாடர்னைசேஷன் என்று தனிப் பிரிவாகப் பிரித்து ஒரு டெபுடி ஜெனரல் மேனேஜரை நியமித்து கூடவே என்னையும் அதில் சேர்த்திருந்தார்கள்.
மேலே படியேறி வந்தவனை பாஸ் அழைப்பதாகச் சொன்னதும் 'சாப்பாடு அவுட்டா' என்று யோசித்தபடி உள்ளே போனேன்.
"
ஃபைல் வந்துரும் ஸார்"
"
ஒரு புது அஸைன்மெண்ட்"
"
எ..ன்ன"
"
மாடர்னைசேஷன் குரூப்பில் நீயும் இருக்கே"
"
ஸார்.. ஏற்கெனவே ஓவர் லோட்.."
"
ஃபைனான்ஸ்ல வித்யா ரெப்ரெசென்டேட்டிவ்"
"
எப்ப ஸார் மீட்டிங்" என்று உடனே பல்டியடித்தேன்.
"
குட்.. உன்கிட்டே இதான் எனக்கு ரொம்ப பிடிச்சது.. உடனே ஆக்ஷன்ல இறங்கிடறே"
"
ஹி..ஹி.."
என் வழிசலைப் பொருட்படுத்தாமல் ஃபைலை வீசினார்.
"
நாளைக்கு நம்ம டிபார்ட்மெண்ட் மேலே எந்தப் புகாரும் வந்திரக்கூடாது. ஜிஎம் பர்சனலா கவனிக்கிறார். நம்ம ப்ளோர் சக்ஸஸ் ஆனா.. அதே ஃபேஷன்ல மத்த நாலு ஃப்ளோரும் வொர்க் ஆகும். புரிஞ்சுதா"
"
ஓக்கே.. ஸார்"
"
யூ மே கோ"
சாப்பாடு கசந்தது. இண்டர்காமில் இரண்டாவது மாடியை அழைத்தேன்.
"
வித்யா ஹியர்"
"
வாழ்த்துகள்"
"
எதுக்கு"
"
மாடர்னைசேஷன் டீம்ல இருக்கீங்களே"
"
அப்ப நான் உங்களுக்கு வாழ்த்து சொல்லணுமா பதிலுக்கு"
"
எ..ப்படித் தெரியும்"
"
ஹன்ச்.."
"
வாவ்.. ரியலி நீங்க பிரில்லியண்ட்"
"
முதல்ல அழகு.. இப்ப புத்திசாலித்தனம்.. அப்புறம்"
எந்த உணர்ச்சியும் காட்டாமல் வித்யா பேசியது என்னை என்னென்னவோ செய்தது.
"
எந்தத் தப்பும் செய்யாம சக்ஸஸ்ஃபுலா முடிக்கணும்"
"
எ..ன்ன"
"
இ..ந்த பிராஜக்டை சொன்னேன்"
"
ஓக்கே"
வைத்து விட்டாள்.
பிறகுதான் தெரிந்தது. என்னுடைய ரொட்டீன் வேலைகளுக்கிடையே இந்த ஸ்பெஷல் பிராஜக்ட்டும் எனக்கு. ஏற்கெனவே விழி பிதுங்கும். என்ன.. இந்த வேலைக்கு நிச்சயமாய் வித்யா உடனிருப்பாள்.
அவசரம் அவசரமாய் சாப்பாட்டை முடித்துக் கொண்டு மாடர்னைசேஷன் ஃபைலைப் புரட்டினேன். முதல் மீட்டிங்கில் எப்படியும் என் புத்திசாலித்தனத்தைக் காட்டி விட வேண்டும். வித்யாவை இம்ப்ரெஸ் செய்ய இதை விட்டால் வேறு சான்ஸ் இல்லை.
குறிப்பெடுக்க ஆரம்பித்ததில் நேரம் போனதே தெரியவில்லை.
மெயிலில் தகவல் வந்திருந்தது.
'
முதல் கூட்டம் நாளை மதியம் இரண்டு மணிக்கு.. மினி கான்பரன்ஸ் ஹாலில்.'
என்னுடைய வழக்கமான ஃபைல்களைப் பார்த்துவிட்டு, ரேட் நெகோஷியேஷனுக்கு வரச்சொல்லி மெயில் அனுப்பி விட்டு, ஃபைனான்ஸ் அப்ருவலுக்கு ஃபைல் அனுப்பிவிட்டு.. சோம்பல் முறித்தபோது டீ வந்தது.
இன்று மதியம் சாப்பாட்டைத்தான் அரக்க பரக்க சாப்பிட்டேன். டீயை ரசித்துக் குடித்தேன். என் நண்பனின் அறிவுரை. 'எந்த வேலையைச் செஞ்சாலும் முழு மனசா.. அந்த நிமிஷம் அந்த வேலை மட்டும்தான்கிற மாதிரி.. டைவர்ஷன் இல்லாம ஈடுபாட்டோட செய். உனக்கு வாழ்க்கைல அலுப்பே வராது'
ரசனை! ஃபைலைப் பார்த்தாலும் சரி.. வித்யாவை நினைத்தாலும் சரி. ஈடுபாடு மட்டுமே.
எழுந்து அடுத்த மேஜை நண்பரைக் கடந்து போகும்போது அவர் ஃபோனில் பேசியது கேட்டது.
"
வித்யா வீட்டுக்குப் போயிட்டாங்களா.. அப்ப என் புரபோசல்?"
எதிர்முனையில் என்ன சொன்னாரோ..
"
அடடா.. ஸாரி.. அது எனக்குத் தெரியாது.. என்னவாம்.. எந்த ஹாஸ்பிடல்"
நின்றேன். குரலில் படபடப்பில்லாமல் கேட்டேன்.
"
என்னவாம்"
"
வித்யாவோட குழந்தைக்கு உடம்பு சரியில்லையாம். அடிக்கடி ஃபிட்ஸ் வருமாம்.. நல்ல வேளை வேலைக்கு வச்சிருக்கிற அம்மாவே டாக்டர்கிட்டே கூட்டிகிட்டு போயிட்டாங்க. ஃபோன் செஞ்சிருக்காங்க. இவங்க இப்ப கிளம்பிப் போறாங்க"
வித்யாவின் குழந்தை.. வித்யா மணமானவள்.
இருக்கைக்குத் திரும்பி இண்டர்காமில் நண்பனை அழைத்தேன்.
"
ஏண்டா பொய் சொன்னே.. வித்யா அன்மேரீட்னு"
"
அப்படித்தான் நினைச்சேன்.. இரு.. இரு யாரோ அப்படித்தான் என்கிட்டே சொன்னாங்க.."
அவன் ஹலோ.. ஹலோ என்று கத்தும்போதே ரிசீவரை வைத்து விட்டேன்.

என் குடும்பத்தைப் பற்றி நான் எதுவும் சொல்லவே இல்லை. நானும் என் அம்மாவும் மட்டும்தான். அப்பா ஃபோட்டோவில் பார்த்ததுதான். சற்றே முரட்டுப் பார்வை. ஆனால் பிரியமாக இருந்தார் என்று அம்மா சொல்லுவாள். என்ன பிரியம்.. எட்டு மாத உறவுக்குள் பிரியம் எல்லாம் கண்டு பிடிக்க முடியுமா என்ன. எனக்குத் தெரியவில்லை.
அவர் வாங்கிக் கொடுத்த முதல் புடவை, வாட்ச் (இப்போதும் ஓடிக் கொண்டிருக்கிறது), அம்மாவுக்குப் பிடித்த ஜாதிப்பூ (பாலிதீன் கவரில் இப்போது), அப்பா கடைசியாய் போட்டுக் கொண்ட ஷர்ட் (வாஷ் செய்யப்படாமல்), 'என் செல்லக் குட்டிக்கு' என்று அப்பா எழுதிய பரிசுப்பொருள் (அவர்களின் சங்கேத பாஷை என்று என் யூகம்), இருவருமாய்ச் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் (ஸ்டுடியோவில் வெளியே விளம்பரத்திற்கு வைத்திருந்த புகைப்படங்களில் இதுவும் ஒன்று) கடை வீதி வழியே போனால் அம்மா அந்த இடம் வரும்போது விசும்புவது புரியும்.
'
ஏம்மா மறுபடி கல்யாணம் பண்ணிக்கலே.. என்னை ஒரு மாத்திரையில அழிச்சுட்டு புதுசா எல்லாத்தியும் ஆரம்பிச்சுருக்கலாம்ல'
'
நீ உருவானது அவருக்குத் தெரியும்டா.. வெளி உலகத்தை எட்டிப் பார்க்கப் போறேன்னு உனக்காக கற்பனையில மிதந்தார்.. அடுத்த வாரம் டெலிவரி இருக்கலாம்னு டாக்டர் சொல்லியிருந்தார். தலை தீபாவளிக்காக வந்தார்.. பைக்ல திரும்பும்போது பைபாஸ் ரோட்டுல எப்ப அடிபட்டாரோ.. கார்த்தால லாரிக்காரன் பார்த்துட்டு டிராபிக் போலிசுக்குத் தகவல் சொல்லியிருக்கான். வந்து பார்த்தப்ப உயிர் இல்ல..'
நிறைய தடவை கேட்ட கதை.
'
கர்ப்பிணிப் பெண் ரொம்ப அழக்கூடாதுன்னா.. நான் அழலே. நீ பிறந்ததும் மனசார அழுதுக்கலாம்னு. டெலிவரி ஆனதும் சுத்தி முத்தி பார்த்தேன்.. அந்த வலியிலயும். அப்பா எங்கேயாச்சும் நிக்கறாரான்னு. உன்னைப் பார்க்க அவர்தான் முதல்ல நிப்பேன்னு சொல்லியிருந்தார்..'
'
இருந்தாராம்மா'
அம்மா சிரித்தாள்.
'
நீ வர வர என்னை விட பூஞ்சையா மாறிகிட்டு வர..'
'
நிச்சயம் அப்பா என்னைப் பார்த்திருப்பார்..'
'
ம்ம்.. அப்படித்தான் அப்புறம் ஒரு நாள் கனவுல வந்து சொன்னார். உன்னை நல்லா வளர்க்கணுமாம்.. அவர் இல்லேன்னு விரக்தில விட்டுரக் கூடாதுன்னார்..'
'
ஓ.. அதனாலதான் நீ வேற கல்யாணம் பண்ணிக்கலியா'
'
தோணலைடா..'
அம்மாவின் முகத்தில் தெரிந்தது நிஜம். அவள் கையைப் பற்றிக் கொண்டபோது ஜில்லென்றிருந்தது.
'
அம்மா.. இப்படிக் கேட்கிறேன்னு தப்பா நினைக்காதே.. உன் வாழ்க்கை வீணாப் போச்சுன்னு எப்பவாச்சும் தோணியிருக்கா'
'
நீ இருக்கும்போதா?!'
கேட்டிருக்கக் கூடாது. அம்மாவின் கையை இறுகப் பற்றிக் கொண்டேன். மடியில் படுத்துக் கொண்டபோது நண்பன் சொன்னது ஞாபகம் வந்தது.
'
நாம வளர்ந்துட்டா சில விஷயங்களை மிஸ் பண்றோம்ல.. உதாரணமா சின்ன வயசுல எப்படி சுவாதீனமா அம்மா மடியில படுத்துக்கறோம். அதுவே வயசானா விலக வேண்டியிருக்கு'
அம்மாவிடம் அதைச் சொன்னேன்.
'
நல்ல வேளை எனக்குக் கொடுப்பினை இருக்கு'
அந்த நிமிடம் காலம் எனக்குக் கொடுத்த வரம். என் வாழ்க்கைப் புத்தகம் அந்தப் பக்கம் மட்டும் எதுவும் எழுதப்படாமல் வெள்ளையாய்ப் புரண்டது. சில நிமிட உணர்வுகளை எதற்குப் பகிரங்கப் படுத்த வேண்டும்?
அது அனுபவிக்க மட்டும்.
இன்று அம்மாவிடம் என் காதலை.. அது பூத்த மறு நிமிடம் வாடியதை.. சொல்ல நினைத்தேன்.
"
ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலயும் இரண்டு பெண்கள் நிச்சயம்.. இல்லியாடா.."
"
ம்ம்"
"
யார் அந்த இன்னொரு பெண்?"
அம்மா எதிலும் நேரடித் தாக்குதல்தான்.
"
எப்படித் தெரியும்மா"
"
நீ சில சமயம் வளரவே இல்லைன்னு தோணுதுடா"
இதே புத்திச்சாலித்தனம் வித்யாவிடம் எனக்கு தென்பட்டு அதுவே ஈர்த்திருக்கிறது.
"
வித்யா"
அவளைப் பற்றி சொன்னேன்.
"
போ.. நாளைக்கு. அவ குழந்தைக்கு என்ன பிரச்னைன்னு நாசூக்கா கேளு. ஏதாச்சும் உதவி தேவைப்பட்டா பிராமிஸ் பண்ணு. செஞ்சு கொடு.."
எதிர்பார்ப்பில்லாத சுத்தமான அன்பை எனக்கு உணர்த்தி விட்டாள்.



(தொடரும்)

(தேவி - 02.05.2012)