January 31, 2014

பூஞ்சிறகு




"மிழ்"
"என்ன"
"தமிழ்"
"சொல்லு"
"தமிழ்"
"பிசாசே"
அடுத்த நிமிஷம் மெசேஜ் அடிப்பதை விட்டு போன் அடித்து விட்டேன்..
"ஹைய்யோ.. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு பா"
"என்ன பிடிச்சிருக்கு"
"எப்படி உனக்கு அந்த நேம்ல என்னை கூப்பிடணும்னு தோணிச்சு"
"அடக் கடவுளே.. "
"கூப்பிட்டியா"
"உன்னை இல்ல"
"சொல்லு.. எப்படி உனக்கு அந்த பெயர்ல அழைக்க தோணிச்சு"
"அது வசவுடா மவனே"
"இருக்கட்டுமே.. எனக்குப் பிடிச்சிருக்கே"
"இப்ப மணி என்ன தெரியுமா"
"பன்னண்டு.."
"ராத்திரி பன்னண்டு"
"அப்படியா"
"டேய்.. எனக்குத் தூக்கம் வருது.. பகல் முழுக்க கம்ப்யூட்டர்ல.. இப்போ செல்லுல.. என்னால முடியல"
"ஒரு வரி பாடு.. ஒரே வரி.. விட்டுடறேன்"
"பிசாசு" என்றாள் மறுபடியும்.
ஏதோ ஹம் செய்தாள்.
"புரியல.. ஆனா நல்லா இருக்கு"
"சரி.. தூங்கு"
"துளசி எப்படி இருக்கார்"
"துள..சி?"
"மறந்துருச்சா"
"ஓ.. அவரா.. இப்போ எதுக்கு அவர் ஞாபகம்"
"ப்ளூட் எங்கிருந்தோ கேட்டுது"
"ஹ்ம்ம்.. இன்னிக்கு நீ என்னைத் தூங்க விடப் போறதில்ல.. அது புரிஞ்சிருச்சு"
"டயர்டா இருக்கியா"
"அதைத்தானே பிசாசு அப்போ பிடிச்சு சொல்றேன்"
"சரி.. தூங்கு"
"ம்ம்"
"உன்னோட ம்ம் ரொம்ப அழகு"
"...."
"எப்படின்னு கேட்க மாட்டியா"
"..."
"ஓ.. தூங்கிட்டியா.."
"..."
"சரிப்பா.. குட் நைட்"
மொட்டை மாடியில் ஒரு காகம் துணி உலர்த்தும் கொம்பில் உட்கர்ந்திருந்தது. அதுவும் காதல் வயப்பட்ட காகமாய் இருக்கலாம். ஏதேனும் ஒரு கவிதை கூட மனசுக்குள் சொல்லிக் கொண்டிருக்கலாம்.
இப்போதும் குழலோசை கேட்டது. பிரமையா..

துளசி... தமிழைச் சந்தித்தது அவரால்தான்.
தாம்பரத்திலிருந்து எக்மோர் செல்லும் போது 'செந்தமிழ்த் தேன்மொழியாள்' அடுத்த பக்கமிருந்து காற்றில் வந்தாள். அப்படியே மனசைக் கட்டிப் போடுகிற இசை. குழல் பேசியது. அவரிடம். அருகில் வர வர.. புரிந்தது.. அவருக்கு இசைக் கண் மட்டுமே என்று.
பழைய பாடல்களைக் குழலில் பிழிந்து காதுக்கு அமுதூட்டினார்.
கை நீட்டவில்லை. யாராவது அவரைத் தொட்டால் நின்று பெற்றுக் கொண்டார். ஒரு வினாடி நன்றி மின்னுகிற முகம் மீண்டும் புல்லாங்குழலுக்குள் புதைந்து கொண்டது. என் பெட்டிக்கு முன் வரிசை இருக்கைகளில் அத்தனை கூட்டமில்லை.
"உட்காருங்க தோழரே"
கணீரென்று ஒரு குரல் கேட்டது.
யாரது.. எட்டிப்பார்த்தேன். அவள் கண்கள் தான் அப்போதும் இப்போதும் நீந்தத் தெரியாத என்னைச் சுழற்றி நடுக்கடலில் விட்டு விடுகிறது.
"மன்னிக்கணும். உட்கார்ந்து பேச எனக்கு அவகாசமில்லை" என்றார் புன்முறுவலுடன்.
"ஒரே நிமிஷம்"
சீட்டின் நுனியில் அமர்ந்தார்.
"இந்தாங்க"
100 ரூபாய்த் தாள் அவர் கைகளில் வைக்கப்பட்டது.
"உங்க இசைக்கு மரியாதை செய்யத் தோணிச்சு.. அதான் உட்காரச் சொன்னேன்.. இனி உங்க விருப்பம் போல.."
அவர் ஒரு நிமிஷம் ஸ்தம்பித்திருந்தார். கண் கலங்கியிருக்க வேண்டும்.
பிறகு எழுந்து போய் விட்டார்.
எந்த ஸ்டேஷனில் இறங்கினாள் என்று கவனிக்கத் தவறி விட்டேன்.
இது முதல் சந்திப்பு.
அடுத்த வாரத்தில் மறுபடியும் அவளைப் பார்த்தபோது நிமிடத்தில் மனசுக்குள் மணி அடித்தது.
துளசியும் சொல்லி வைத்த மாதிரி வந்தார். அவள் அருகில் வரும் போது 'வணக்கம்' என்றாள்.
துளசி நின்று சிரித்து விட்டுப் போனார்.
ரு மாத இறுதியில்.. கவிதை நூல் வெளியீட்டு விழா ஒன்றில் மறுபடி அவளைப் பார்த்தேன். வாசலில் கடை பரப்பியிருந்த தொகுப்புகளை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
'பிரபஞ்சத்தின் பின்னால் எனக்கொரு இடம்' தொகுப்பை எடுத்தவள் அதை பணம் கொடுத்து வாங்கிக் கொண்டாள்.
சட்டென்று முன்னால் நகர்ந்து 'ஆட்டோகிராப் வேணுமா' என்றேன் சிரிப்புடன்.
செம ஷார்ப் ! பின் அட்டையை திருப்பிப் பார்த்தாள்.
'அவசியமில்லை.. உங்க கவிதை சொல்லாத எதையும் உங்க கையெழுத்தில் எனக்குக் கிடைக்கப் போவதில்லை"
அதான் தமிழ்! மனதில் பட்டதை அப்படியே பட்டவர்த்தனமாய் போட்டு உடைப்பவள்.
"அதுல என் செல் நம்பர் இருக்கு" என்றேன் விடாமல்.
"புக்கை ரிடர்ன் எடுத்துப்பாங்களா" என்றாள்.
விலகி வழிவிட்டேன். சரியான பச்சை மிளகாய்.
இரண்டு மூன்று நாட்கள் ஓடி விட்டன. நானே எதிர்பார்க்கவில்லை. ஆனால் மெசேஜ் அனுப்பி இருந்தாள்.
"கவிதையின் ஆத்மாவைப் பிடித்திருக்கிறீர்கள்.. வாழ்த்துகள்- தமிழ்"
பேசலாமா, வேண்டாமா என்று யோசிப்பதற்குள் என் விரல் அழுத்திவிட்டது.
முழு ரிங்கும் போய் 'நீங்கள் அழைக்கும் நபர் எந்த அழைப்பையும் ஏற்கவில்லை' என்று என்மேல் கரிசனம் உள்ள ஒரு பெண் சொன்னார்.
என்னை நானே மனசாரத் திட்டிக் கொண்டேன்.
அப்போதுதான் அவள் அழைத்தாள்.
"சொல்லுங்க"
"நன்றி.. கவிதையைப் பாராட்டியதற்கு"
"ஒரு மெசேஜ் போதுமே"
"உட்கார வச்சு நன்றி சொல்லி இருக்கணும்.. அதானே முறை"
"புரியல"
"ரயில்ல.. ப்ளூட் வாசிக்கிறவர்"
"ஓ.. "
"அதைப்பத்தி கூட ஒரு கவிதை எழுதி வச்சிருக்கேன்.. அடுத்த தொகுப்புல வரும்"
"அவருக்கு வேற ஏதாச்சும் உருப்படியா பண்ணனும்.."
" எந்த மாதிரி"
"சரி.. நன்றி.. வச்சிரவா"
வைத்து விட்டாள்.
ன்ன செய்யப் போகிறாள் என்று இன்னொரு கூட்டம் வரை புரியாமல் இருந்தது. சமூக ஆர்வலர் கூட்டம் ஒன்றில் புதிர் அவிழ்ந்து விட்டது. தற்செயலாய்த்தான் நானும் அங்கே போனேன். நிகழ்ச்சியின் நடுவில் ஒரு அறிவிப்பு.
"இதோ இசையால் நம் பார்வைகளை விசாலமாக்கப் போகிறார்.. துளசி"
துளசி மேடைக்கு வந்தார்.
'.. கல்லிலே கலை வண்ணம் கண்டான்..' அலைபாயுதே.'
வாசித்துக் கொண்டே போனார். எழுந்து போக இருந்த சிலர் கூட அப்படியே நின்று விட்டார்கள். ஒருவர் தன் விருப்பமாய் 'புல்லாங்குழல் கொடுத்த' வாசிக்கச் சொன்னார்.
அரை மணி நேரம் கூட்டத்தைக் கட்டிப் போட்டிருந்தார். விழா அமைப்பாளர் எங்கிருந்தோ ஓடோடி வந்தார்.
"புல்லாங்குழலிசை என்று சொன்னதும் நான் கூடப் பெரிதாய் நினைக்கவில்லை. இப்போது இசை கேட்டதும் என்னை மறந்தேன். அருமையான இசையைக் கண்டுபிடித்துக் கொடுத்த தோழருக்கும் நன்றி"
வற்புறுத்தி தமிழை மேடையேற்றினார்.
தமிழ் மௌனமாய் வணக்கம் சொன்னாள்.
துளசிக்கு சன்மானம் கொடுத்தார்கள்.
வாங்கிக் கொள்ளுமுன் அவர் மைக்கில் சொன்னார்.
"நீங்க ரசிச்சீங்களான்னு எனக்குத் தெரியாது.. அதைக் கண்டுபிடிக்க எனக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கு.."
இடைவெளி கொடுத்து சிரிப்புடன் சொன்னார்.
"உங்க கைத்தட்டல்கள்"
பத்து நிமிடம் விடாமல் கை தட்டினார்கள். தமிழ் அழுதிருக்க வேண்டும் அதை அவள் மறைக்கவில்லை. பட்டுக் கத்தரித்தாற்போல பேசுகிற அவளுக்குள் இருந்த பூஞ்சிறகைக் கண்டு கொண்ட ஆனந்தம் எனக்கு.
துளசியை அழைத்துக் கொண்டு கீழே வந்தாள்.
"வணக்கம் துளசி.. அருமையான இசைக்கு நன்றி" என்றேன் கைப்பிடித்து குலுக்கி.
யாரோ அவரை இடித்துக் கொண்டு வேகமாய்ப் போனார்கள். தடுமாறி சுதாரித்துக் கொண்டார்.
"நீங்க எங்கே போகணும்"
இடத்தைச் சொன்னார்.
"அட.. நானும் அந்தப் பக்கம்தான்.. வாங்க ஆட்டோல போயிரலாம்.. இறக்கி விட்டு போறேன்"
தமிழ் என்னை வினோதமாய்ப் பார்த்தாள்.
"உங்களுக்கு ஏன் சிரமம்"
"அதெல்லாம் ஒண்ணுமில்லை.. அவர் வாசிச்சதைக் கேட்டேன்.. அவர் பேசியும் கேட்கலாமேன்னு"
அரைமனதாய் நின்றாள்.
துளசியும் சொன்னார்.
"பரவாயில்லம்மா.. நான் அவர் கூட போயிடறேன்"
ஆட்டோவில் தமிழைப்பற்றியே நான் பேசியிருக்க வேண்டும். துளசியைப் பேச விடாமல். அவர் என்னிடம் எதுவும் சொல்ல வில்லை. மனசுக்குள் சிரித்துக் கொண்டிருந்தாரோ என்னவோ.
இரவில் வீடு திரும்பும்போது அநியாயத்திற்கு லேட் ஆகிவிட்டது.
'நன்றி' என்று தமிழின் மெசேஜ் வந்தது.
'பேசலாமா' என்று கேட்டேன்.
'குட் நைட்' என்று பதில் வந்தது.
எல்லாத் துவாரங்களிலும் காற்று இசையாகி விடுவதில்லை என்று பதிலுக்கு அனுப்பினேன்.
கைகளைப் பின்னுக்கு வைத்துப் படுத்திருந்தேன். அழைப்பு வந்தது கேட்கவில்லை முதலில். முழுவதும் ஒலித்து அடங்கி விட்டது. கொஞ்சம் பொறுத்து அடுத்த முறை ஒலித்த போது எனக்கும் கேட்டது.
"ம்ம்" என்றேன் யாரென்று பார்க்காமல்.
"அவரைப் பேசவே விடலை போலிருக்கே"
தமிழ் !
எழுந்து அமர்ந்து விட்டேன்.
"எதுக்கு பொய்லாம்.. உங்க வீடு அங்கியா இருக்கு"
"எனக்கு மட்டும் ஈரம் இல்லியா மனசுல.. உங்க அளவு இல்லாட்டியும் சுமாராவாச்சும் இருக்கு"
பதில் பேசவில்லை.
"நன்றி அழைச்சதுக்கு" என்றேன்.
"ஒன்பதரைக்கு தாம்பரமா.. நீங்க வர நேரம்" என்றாள்.
"என்ன.." என்றென் சட்டென்று புரியாமல்.
"மக்கு"
வைத்துவிட்டாள்.
ம்மா மட்டும் அப்பா இல்லை. என்ன ஆனாரோ.. அவரைப் பற்றி பேசுவதைத் தவிர்த்தாள். ஒரு அண்ணன். ஆனால் வீட்டோடு இல்லை. ஆண்களைப் பற்றி ஒரே வார்த்தையில் மதிப்பீடு வைத்திருந்தாள். 'உதவாக்கரைகள்'
'என் வாழ்க்கையில் எந்த ஆணுக்கும் இடமில்லை என்றுதான் நினைச்சேன்.. ஹூம்..'
நான் பதில் சொல்லவில்லை. அவளுக்குப் பிடிக்காது.
பேசிக் கொண்டே போனோம். மாம்பலத்தில் இறங்கிப் போனாள்.
"உங்க ஆபிஸ் எக்மோர்னு தெரியும்.. என் பின்னால வராம போங்க"
மாலையில் சரியாக என் நேரத்திற்குக் காத்திருந்தாள்.
"போலாமா"
மறுபடி தாம்பரம் வரை.
இறங்கியதும் சொன்னாள்.
'இவ்வளவுதான்.. இதுக்குப் போய் உங்க மனசை அலைபாய விடாம கவிதைல செலுத்துங்க.. பை'
போய் விட்டாள்.
அழுகிற சின்னப் பிள்ளைக்கு கமர்கட் கொடுக்கிற மாதிரி !
அடுத்த கூட்டத்தில் முன் வரிசையில் இருந்தவளைப் பார்க்காத மாதிரி பார்த்துக் கொண்டிருந்தேன். முடிகிற நேரத்தில் எப்படி மறைந்தாளோ.. தெரியவில்லை. என் பார்வை அவளிருக்கும் இடத்தை அலசிக் கொண்டே வந்தது. கண்டு பிடிக்க முடியவில்லை.
துவண்டு போனது மனசு.
பின்னாலிருந்து குரல் கேட்டது.
"போலாமா"
தமிழ் !
கோபுரத்தில் கல்லிடுக்கில் விழுந்த பறவை எச்ச விதை துளிர்த்து நிற்பதைப் போல எங்கள் காதலும்.. அப்படித்தான் தமிழின் பார்வையில்..
'எப்ப வேணா யாராச்சும் பிடுங்கிப் போட்டுருவாங்க' என்றாள்.
"இது காட்டுக்குள்ள இருக்கற கவனிப்பாரற்ற கோவில்.. மரமாகி நிலைச்சிருக்கும்.." என்றேன்.

செல் சிணுங்கியது. தமிழ்.
"ம்ம்.."
"தூக்கம் வரலை"
"ஆமா"
"எனக்கும்டா பிசாசு"
"நம்ம கல்யாணத்துக்கு நிச்சயம் துளசியை அழைக்கணும்"
"அவர் மட்டும்தான்.. "
எங்கிருந்தோ ஒலிபெருக்கியில் ஆண்டாளின் காதல் ஒலிக்கத் தொடங்கியது

(கல்கியில் பிரசுரம் )

January 11, 2014

இப்படித்தான்...

அந்தப் பாதைக்குத்
தெரிந்தே இருக்கிறது..
உருவாகக் காரணமாய் இருந்த
முதல் காலடி!

துளிர்த்த முதல் இலைக்குப்
புரிகிறது..
நீரூற்றிப் போன கை!

வெட்டிய குளத்தில்
வந்து விழுந்த
முதல் மழைத் துளியை
இன்னமும் ஞாபகம்
வைத்திருக்கிறது ஊருணி !

பழகிப் போன
மனிதரை நினைவுபடுத்த
வேண்டியிருக்கிறது
சில வார்த்தைகளும்..
பலப்பல நினைவுகளும்... !