February 24, 2014

பறவை ஸ்நேகிதம்



இரண்டு வருடங்கள் இருக்குமா.. இருக்கலாம். பறவைகளுடனான என் சிநேகிதம்.. 

‘காலை வேளைல என்ன பண்ணுற’

‘7 மணி ஆபிசுக்கு கிள்ம்புற அவ்சரத்துல இருப்பேன்..’

’மொட்டை மாடி இருக்கா’

‘ம்’

’பறவைகள் வருமா’

‘காக்கா வரும்’

‘உனக்கு அதுவே அதிகம்..’

‘கலாய்ச்சுட்ட..’

‘சரி.. கெளம்புறதுக்கு முன்னால கொஞ்சம் சாதம்.. இல்ல அரிசி.. வாயகன்ற பாத்திரத்துல தண்ணி வச்சுட்டு போயேன்..’

‘எதுக்கு’

‘சொன்னா செய்யேன்’

செய்தேன். ஓரிரு காக்கைகள் என்னை உற்றுப் பார்த்தன. என் மீதான அவநம்பிக்கை அதன் கண்களில். நான் நகர்ந்ததும் பறந்து வந்து முகர்ந்தன. கொத்தி கீழே தள்ளியது ஒன்று.

சொன்னேன் அவளிடம்.

‘நீ சொன்னேன்னு செஞ்சேன்.. எனக்கு நோஸ் கட்’

‘பரவாயில்ல.. தொடர்ந்து செய்’

இன்று.. இரு வருடங்களுக்குப் பின்.. எனக்கு எத்தனை பறவை ஸ்நேகிதங்கள்.. சிட்டுக் குருவிகள்.. புறாக்கள்.. காகங்கள்..

வெளியூருக்குப் போகும் நாட்களில் மனசு தவித்துப் போகிறது.

திரும்பி வந்ததும்.. மொட்டை மாடிக்கு ஓடத் தோன்றுகிறது.

முகம் திருப்பி கோபமாய் அமர்ந்திருக்கும் பறவைக்கு அருகே பறந்து போய் அமர்ந்து கெஞ்சத் தோன்றுகிறது.


அவைகள் உணர்வுபூர்வமானவை..  நம்மை நேசிப்பதை மிக நிதானமாய்ச் சொன்னாலும்.. அந்த நேசம் அப்புறம் எந்த காரணத்தினாலும் மாறுவதேயில்லை.

இப்போதும் என்னுள் அதே கோபங்கள்.. குமுறல்கள்.. ஆனந்தம்.. எல்லா

உணர்வுகளும்தான். ஆனால் அவற்றைப் பகிர விண்வெளி சிநேகிதங்கள் உண்டு
இப்போது என்னருகே.

எனக்கு இறக்கை ஒட்டிக் கொடுத்த சிநேகிதிக்கு ...    :)







   


12 comments:

Anonymous said...

வணக்கம்

இரசனையும் கற்பனையும் மிக அருமையாக உள்ளது... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வை.கோபாலகிருஷ்ணன் said...

//நம்மை நேசிப்பதை மிக நிதானமாய்ச் சொன்னாலும்.. அந்த நேசம் அப்புறம் எந்த காரணத்தினாலும் மாறுவதேயில்லை.//

நிதானமாகவே சொல்லட்டும். அவசரமே இல்லை.

எப்படியோ அப்புறம் அந்த நேசமும், பாசமும், அன்பும், அரவணைப்பும், ஆறுதலும் மாறாமல் நீடித்தால் சரிதான்.

நான் சொல்வது இங்கு வேறொரு பறவையைப்பற்றி. ;)))))

அன்புடன் வீ.....ஜீ

திண்டுக்கல் தனபாலன் said...

மாறாத நேசத்தை ரசித்தேன் ஐயா...

வாழ்த்துக்கள்...

ராமலக்ஷ்மி said...

விண்வெளி சிநேகிதங்கள் தொடரட்டும். இறக்கை ஒட்டிக் கொடுத்த சிநேகிதிக்கு வாழ்த்துகள்:)!

இராஜராஜேஸ்வரி said...

பறவைகள் உணர்வுபூர்வமானவை.. நம்மை நேசிப்பதை மிக நிதானமாய்ச் சொன்னாலும்.. அந்த நேசம் அப்புறம் எந்த காரணத்தினாலும் மாறுவதேயில்லை.

"பறவை ஸ்நேகிதம்" நமக்கும் இறக்கை ஒட்டிக்கொள்கிறது ...!

ராஜி said...

எங்க புது வீடு கட்டும்போது பறைவகளுக்கு தீனியும், தண்ணீரும் வைக்க மொட்டைமாடி கைப்பிடி சுவரில் ஆங்காங்கு கிண்ணங்கள் வைக்கச் சொல்லி வீட்டுக்காரர்க்கிட்ட கேட்டேன். ஆனா, மாடி முழுக்க பறவை எச்சங்களால் அசிங்கமாகிடும்ன்னு சொல்லி வேணாம்ன்னு சொல்லிட்டாங்க.

ADHI VENKAT said...

விண்வெளி சிநேகிதங்கள் கிடைத்த தாங்கள் கொடுத்து வைத்தவர் தான்... அதன் அன்பு எந்நாளும் மாறாதது ஆயிற்றே...

G.M Balasubramaniam said...

இது போலான ஸ்நேகம் என் தம்பி மனைவியிடம் கண்டிருக்கிறேன். ஆனால் அது காகங்களுடன் மட்டுமே. வேறு பறவைகள் அங்கு காணக் கிடைப்பதில்லை என்பதும் ஒரு காரணமாகலாம்.

கே. பி. ஜனா... said...

ஆஹா! நினைத்துப் பார்த்தாலே பரவசமாக இருக்கிறது பறவைகளுடனான சினேகம்!

Unknown said...

அன்பு மட்டும் நம்மிடம் இருந்தால்
போதும் ! பறவைகள் என்ன மிருகங்கள் கூட நம்மிடம் நட்பு கொள்ளும்!அதை
தாங்கள் எடுத்துக்காட்டியுள்ள விதம் அருமை!

கதம்ப உணர்வுகள் said...

பறவைகளுடன் ஒரு சிநேகிதம்…
அதிக பயப்படும் சுபாவம் உடைய உயிர்கள் அவை… கிட்டே போய் அதன் அழகை ரசிக்க கூட முடியாது ஏனெனில் பயந்து படபடவென்று சிறகுகள் சிறகடிக்க பறந்துவிடும்… புறாவின் மென்மை, காகத்தின் புத்திசாலித்தனம் சிட்டுக்குருவியின் கீச் கீச் இப்படி எதுவுமே ரசிக்கனும்னா அதற்கெல்லாம் சிநேகிதமாகவேண்டும்.. சிநேகிதமாக அதன் மனதில் நம் மீது நம்பிக்கை வரவேண்டும்.. இந்த மனிதரிடம் சென்றால் நமக்கு கிடைப்பது அரிசியும் தானியமும் நீரும் மட்டுமல்ல நம் தலைகோதும் அன்பும் தான் என்று அதற்கு தோணவேண்டும்.. அப்படி அதற்கு தோண நாம் அதற்கு பகிரவேண்டியது அரிசியுடன் நீருடன் துளி அன்பு…. மனிதர் பகிரும் துளி அன்பில் பெரிதாய் மகிழ்ந்து தைரியமாக நம்பிக்கையுடன் நம் கைவிரல் நுனியில் வந்து செல்லமாக வலிக்காமல் கொத்தும்… அதன்பின் தோள் மீது அமர்ந்துக்கொள்ளும்…. நம்முடன் சேர்ந்து அதுவும் ந்யூஸ் பேப்பர் வாசிக்கும்.. நம் குரல் கொஞ்சம் சோகமாக மாறினாலும் நம்மை விட்டு நகராமல் தன் மொழியில் ஆறுதல் சொல்லும்… இப்படி எல்லாம் நம்மை சந்தோஷிக்கும் பறவைகளின் ப்ரியங்களை மொத்தமாக பெற்றுவிட அதே அன்பு மனதில் முழுக்க நிறைத்து வைத்திருக்கவேண்டும் ரிஷபாவின் மனதைப்போல… மனிதர் ஒருவரோடு ஒருவர் சிரித்துப்பேச கூட டைம் இல்லாமல் கால்களில் சக்கரம் கட்டிக்கொண்டு பறக்கும் மனிதர்களுக்கிடையே இப்படி ஒரு அற்புதமான பந்தத்தை பறவைகளுடன் ஏற்படுத்திக்கொள்ளும் குணம் எல்லோருக்குமே இயல்பில் வருவதில்லை.. மனதில் அன்பு நிறைந்திருந்தால் மட்டுமே இது சாத்தியமாகிறது… அந்த அன்பு கைவழி ஊர்ந்து இங்கே அனுபவமாக பகிர்ந்துக்கொள்ளவும் செய்கிறது… மனதை அப்படியே வரிகளோடு ஒன்றிவிடச்செய்துவிட்டீர்கள்பா ரிஷபா…

த.ம.4

வெங்கட் நாகராஜ் said...

அருமை.....

ஸ்நேகம் என்றுமே மிகவும் பிடித்தமான விஷயமாயிற்றே.....